தமிழ்நாடு

tamil nadu

G20 summit: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட உலகத் தலைவர்கள் இந்தியா வருகை!

By PTI

Published : Sep 8, 2023, 3:37 PM IST

Updated : Sep 8, 2023, 7:42 PM IST

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டிற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய உலகத் தலைவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

டெல்லி: இந்தியா தலைமை தாங்கும் ஜி20 மாநாடு, டெல்லியில் நாளை (செப் 9) மற்றும் நாளை மறுநாள் (செப் 10) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் தொடர்ந்து இந்தியா வந்து கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லி வந்தடைந்தார். அப்போது அவரை டெல்லி விமான நிலையத்தில் வைத்து ஓய்வு பெற்ற சிவில் விமானப்போக்குவரத்து ஜெனரல் விகே சிங் வரவேற்றார். அதேபோல், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்‌ஷதா மூர்த்தி உடன் இன்று (செப் 8) டெல்லி வந்தடைந்தார்.

இவ்வாறு டெல்லி வந்தடைந்த ரிஷி சுனக்கை, மத்திய அமைச்சர் அஷ்வினி சவுபே, இந்தியாவிற்கான இங்கிலாந்து உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் மூத்த பிரமுகர்கள் டெல்லி விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர். அப்போது, பாரம்பரிய நடனங்கள் நிகழ்த்தப்பட்டது.

மேலும், இந்த மூன்று நாள் இந்திய பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி உடன் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். முன்னதாக, ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய ரிஷி சுனக், தற்போதைய நிலையைக் காட்டிலும், எதிர்காலத்தில் இங்கிலாந்து - இந்தியா உறவானது வலுப்பெறும் என தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஃபெர்னாண்டஸ், காமரோஸ் அதிபர் அசாலி அசோமணி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உள்ளிட்ட உலகின் முக்கிய தலைவர்கள் இந்தியா வந்தடைந்தனர்.

இவ்வாறு டெல்லி விமான நிலையம் வந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரை மத்திய அமைச்சர்கள் ஷோபா கரந்திலாஜே மற்றும் தர்ஷனா ஜார்தோஷ் ஆகியோர் வரவேற்றனர். இவர்கள் அனைவருக்கும் கலாச்சார முறையிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஜி20 மாநாட்டில் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி, டிஜிட்டல் உருவாக்கம், காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச சுகாதாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இந்த ஜி20 குழுவில் இந்தியா உள்பட அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கண்டா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்ஸிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.

இதையும் படிங்க:G20 Summit: 15க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் உடன் பிரதமர் சந்திப்பு - உலக அளவில் வலுவடையும் இந்தியாவின் உறவுகள்!

Last Updated : Sep 8, 2023, 7:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details