டெல்லி :மணிப்பூரின் குரலை பாஜக மற்றும் பிரதமர் கொலை செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான இரண்டாவது நாள் விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், மக்களின் குரலாக இந்தியா காணப்படும் நிலையில், மணிப்பூரில் பாரத மாதாவை பாஜகவினர் கொன்றுவிட்டதாக தெரிவித்தார். உரையை தொடங்கும் போது தான் கூறியது போல் இந்தியா என்ற குரலை நீங்கள் கொன்றுவிட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். நீங்கள் பாரத மாதவின் பாதுகாவலர்கள் அல்ல என்றும் நீங்கள் தான் பாரத மாதாவை கொன்றவர்கள் என்றார்.
மரியாதையுடன் பேசும் போதும், நீங்கள் வன்முறையை கட்டுப்படுத்தவில்லை என்றும் மாறாக எனது தாயை கொன்று வருகிறீர்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். ராவணனுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தொழிலதிபர் கவுதம் அதானி ஆகிய இருவரின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி நடப்பதாக தெரிவித்தார்.
மேகநாத், கும்பகர்ணன் ஆகிய இருவரின் பேச்சை கேட்டு ராவணன் நடந்தான், அதேபோல் பிரதமர் நரேந்திர மோடியும் அமித் ஷா மற்றும் கவுதம் அதானியின் பேச்சை மட்டும் கேட்டு நடப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இலங்கையை எரித்தது ஹனுமன் இல்லை, ராவணனின் அகங்காரம். அதேபோல் நீங்க ஒட்டுமித்த நாட்டையும் எரிக்க முயற்சித்து வருவதாக ராகுல் கூறினார்.
முதலில் மணிப்பூரை எரித்ததாகவும், தொடர்ந்து அதே செயலை தற்போது அரியானாவிலும் மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். தான் மணிப்பூர் நிவாரண முகாம்களுக்குச் சென்று அங்கு உள்ள பெண்களிடம் பேசியதாகவும், அதில் இருந்து உங்களுக்கு இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புவதாக கூறினார்.
ஒரு பெண் தனக்கு ஒரே ஒரு குழந்தை இருப்பதாகவும், தனது கண் முன்னே குழந்தை சுடப்பட்டதாக தெரிவித்ததாகவு மற்றொரு பெண் இரவு முழுவதும் தனது மகனின் சடலத்துடன் படுத்து இருந்ததாக தெரிவித்ததாகவும் ராகுல் காந்தி கூறினார். மற்றொரு முகாமில் இருந்த பெண்ணிடம் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்று கேட்ட போது அவர், நடு நடுங்கியதாகவும், அவருக்கு நடந்தது கூறி முடியாமல் மயக்கம் அடைந்ததாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.