தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 21, 2021, 2:14 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரி பகடை ஆட்டம்: பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி?

காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டதால், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி காங்கிரஸ் அரசிற்கு ஆணையிட்டிருக்கிறார்.

Puducherry is game: Of turncoats
புதுச்சேரிப் பகடை ஆட்டம்: சகுனிகளின் விளையாட்டு

ஹைதராபாத்:புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகார வசிப்பிடமான ராஜ் நிவாஸ் செவ்வாய் மாலை சற்று வித்தியாசமாக இருந்தது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும், அவரது ஊழியர்களும் அப்படியொரு ஆணையை எதிர்பார்க்கவில்லை. குடியரசுத் தலைவரிடம் இருந்த வந்த ஆணை, முன்னாள் காவல்துறை அலுவலரான கிரண்பேடியை பதவியில் இருந்து இறக்கி அந்த இடத்திற்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனை கட்டியங்கூறி வரவேற்றது.

ஏற்கெனவே ஆளும் கூட்டணியில் சலசலப்புகள் ஏற்பட்டு ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜினாமா செய்த சூழலில், சபையின் எண்ணிக்கை அமைப்பு சமபலம் கொண்ட இருபிரிவுகளாய்ப் பிளந்து கிடந்தது. இரண்டு கூட்டணிகளிலும் தலா 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆளும் கூட்டணியில் காங்கிரஸ் 10, திமுக 3, சுயேச்சை ஒன்று என மொத்தம் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள். அதைபோல ஒட்டுமொத்த எதிர்க்கட்சி முகாமிலும் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் (ஏஐஎன்ஆர்) 7, அதிமுக 4, பாஜக 3 என்று மொத்தம் 14 சட்டசபை உறுப்பினர்கள் இருந்தார்கள்.

புதுச்சேரி ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை

கிரண்பேடியின் அதிகார காலத்தில் பாஜகவுக்கு ஆறுதலான ஒரே விஷயம் அந்தக் கட்சியிலிருந்து மூன்று பேர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டதுதான். அந்த நியமனத்தை எதிர்த்து ஆளும் கட்சியான காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு தோற்றுப் போனது. முதலமைச்சர் நாராயணசாமிக்கு அதுவொரு பலத்த அடி. நியமன உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் வந்ததால், எதிர்க்கட்சி முகாமின் எண்ணிக்கைப் பலம் ஏறியது. எந்தவித ஜனநாயகப் போட்டி இல்லாமலே கூடுதலாக மூன்று உறுப்பினர்களைக் கொண்டது. அந்த மூன்று நியமன உறுப்பினர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமையும் உண்டு.

ஆளுநர் தமிழிசையுடன் நாராயணசாமி

பலப்பரீட்சையில் இரண்டு தரப்பிலும் முன்பிருந்த எண்ணிக்கை நிலவரமே தொடருமாயின், சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்தின் வாக்கு இறுதியான தீர்ப்பை எழுதிவிடும். ஊடகங்கள் முன்பு இரண்டு முகாம்களும் நம்பிக்கை முகங்களாகத் தோற்றமளித்து தங்களுக்கு பெரும்பான்மைப் பலம் இருப்பதாக மார்தட்டி தொடைதட்டிக் கொள்கின்றன. நிஜபலம் காட்டும் எண்ணிக்கை வாக்கெடுப்பின் முடிவில்தான் தெரியும்.

கிரண் பேடி என்னும் காரணி

யூனியன் பிரதேசத்தில் அதிரடியாகக் களமிறங்கிய நாள்முதல் கிரண் பேடி பல்வேறு அரசுக் கொள்கை விவகாரங்களில் மூக்கை நுழைத்து நாராயணசாமியின் கண்களில் விரலைவிட்டு ஆட்டினார். அவரது தவறான அணுகுமுறை ஆரம்பமானது, இலவச அரிசி விநியோகத்தில் அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்த போதுதான். ஆரம்பத்தில் நேரடியான பலன் மாற்று (டிபிடி) மானியத் திட்டத்தை விரும்பிய காங்கிரஸ் தன் தவறை உணர்ந்துகொண்டு அதற்குப் பதிலாக இலவச அரிசித் திட்டத்தின் கோப்பில் கையெழுத்து இடுமாறு கிரணை பேடியைக் கேட்டுக் கொண்டது. காங்கிரஸின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

கிரண்பேடி vs நாராயணசாமி

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 134 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே (பிபிஎல்) வாழ்கின்றன. அவர்களின் குடும்பத் தலைவர்களின் வங்கிக் கணக்குகள் ரேஷன் கார்டில் இணைக்கப் பட்டிருந்தன. பெரும்பான்மையான குடும்பங்களில், வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் அரசுப்பணம் அரிசிக்குப் பதில் மதுவில் மடைமாற்றம் செய்யப்பட்டது. வாகன ஓட்டிகளுக்கான கட்டாய ஹெல்மெட், தவறினால் பெரிய தொகையான ரூபாய் 1,000 அபராதம் ஆகியவை ஜனங்களிடம் கோபத்தை ஏற்படுத்தின. புதுச்சேரி மக்களின் அன்பை பாஜகவுக்குச் சம்பாதித்துத் தரவேண்டும் என்னும் அரசக் கட்டளையோடு வந்த கிரண் பேடி அதற்கு மாறாக பலவிசயங்களில் தப்பும் தவறுமான வீரதீரச் செயல்களில் ஈடுபட்டார்.

அண்மையில் பாஜகவில் இணைந்த நமச்சிவாயம்

பொதுத்துறை நிறுவனங்களில் சுயபேணல் என்னும் கிரண் பேடியின் கொள்கை அவற்றை நம்பியிருந்த தொழிலாளர்களைப் பெரிதும் பாதித்தது. அந்த நிறுவனங்களுக்கு மேலும் நிதி அளிப்பதை விட்டுவிட்டு, நிறுவனங்களின் விற்பனையிலிருந்து அல்லது வியாபாரத்திலிருந்து அல்லது தொழிலிலிருந்து கிடைக்கும் லாபத்தை வைத்துக் கொண்டு தொழிலாளிகளின் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் என்று கிரண்பேடி வலியுறுத்தினார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அன்றாட பணிகளில் அவர் மூக்கை நுழைத்தார்.

அரசியல் ஏக்கம்

புதுச்சேரி மக்களின் இதயங்களை வெல்வதுதான் பாஜகவின் நீண்ட நாளைய கனவுத் திட்டம். 2018ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையின் போது, பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ்க்கு ‘பஞ்சாப் புதுச்சேரி (காந்தி) பரிவார்’ என்று புதியதோர் பெயரைச் சூட்டினார். ஆனால் அதன் பின்னர், ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் இந்திப் பிரதேசமான சத்தீஸ்கார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

பின்பு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் மீதான மக்களின் கோபத்திற்குச் சரியான கால்வாய் ஒன்றை வெட்டி அவரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பல்வேறு போராட்டங்களை நடத்தியது காங்கிரஸ். புதுச்சேரியின் நலனுக்கு எதிரானவர் கிரண்பேடி என்ற பிம்பத்தைக் காங்கிரஸ் வெற்றிகரமாகக் கட்டமைத்துக் கொண்டது. விவேகமான பாஜகவின் உள்ளூர் கிளையும் கூட கிரண்பேடியை நீக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதுதான் நகைமுரண். துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி மேலும் மேலும் கட்டமைத்துக் கொண்டிருந்தது ‘பிராண்ட் மோடி’ அல்ல, ‘பிராண்ட் பேடி’ என்று உள்ளூர் பாஜகவினர் மேலிடத்தில் தூபம் போட்டுக் கொண்டே தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

முன்செல்லும் பாதை

போட்டு வைத்த பாஜக திட்டத்தின் படி அரசியல் பாதை அமையவில்லை என்பதால், முடிவில் பேடி வழியனுப்பப்பட்டார்; தமிழிசை சவுந்தரராஜன் உள்ளே கொண்டுவரப் பட்டார்.

கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் ஆகிவிட்ட தமிழிசை சவுந்தரராஜன் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழர். மேலும் அவர்க்கு ’மக்களின் ஆளுநர்’ என்ற அடையாள அட்டை இருக்கிறது. அது புதுச்சேரி மக்களுக்கு நிம்மதியான விஷயம்தான்.

”மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் அதிகாரங்களுக்குள் நான் அத்துமீற மாட்டேன்; அதன் உரிமைகளில் தலையிடவும் மாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பெல்லைகளுக்குள் நின்று நான் செயல்படுவேன்,” என்று பதவிப் பிரமாணம் எடுக்கையில் அவர் சொல்லியிருக்கிறார். அவர் தன் வார்த்தையைக் காப்பாற்றுவாரா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

பாஜகவின் கர்நாடக மாநில துணைத்தலைவர் நிர்மல் குமார் சுரானா, மத்திய மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால், ராஜ்யசபா உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர்க்குப் புதுச்சேரியைக் கவனிக்கும் பணி கொடுக்கப் பட்டிருக்கிறது.

அவர்களுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் உத்தரவு ரொம்ப எளிதானது. பாஜகவுக்கு எதிரான கட்சிகளிலிருந்து இன்னும் நிறைய துரோகிகளை அவர்கள் உள்ளே கொண்டுவர வேண்டும். அப்போதுதான் சட்டபேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்குப் போதுமான வேட்பாளர்கள் கிடைப்பார்கள். காரைக்கால், மஹே, யானம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு யூனியன் பிரதேசமான புதுச்சேரி காலங்காலமாக காங்கிரஸ் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது. இப்போதைய முதலமைச்சர் நாராயணசாமியைப் பொறுத்தவரை, அரசுக்கெதிரான காரணி என்பது ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது. என்றாலும் இங்கே தேர்தல் யுத்தம் என்பது கட்சி செல்வாக்கை விட தனிமனிதர்களின் செல்வாக்கைப் பொறுத்தே அமைகிறது.

மொத்தம் 30 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் 10 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் இருக்கிறார்கள். வில்லியனூரில் 42,329 வாக்காளர்களும், ஆர்லீயன்பேட்டையில் மிகக்குறைவான எண்ணிக்கையில், அதாவது, 24,723 வாக்காளர்கள் இருக்கிறார்கள். புதுச்சேரியின் மொத்த வாக்காளர் தொகை என்பது அருகிலிருக்கும் தமிழ்நாட்டில் ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு இணையானது. முன்னாள் பிரஞ்சு காலனியப் பகுதியான புதுச்சேரியில் 5,000 ஃப்ரான்கோ பாண்டிச்சேரிவாசிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஃபிரான்ஸ் தேர்தல்களிலும் வாக்குரிமை உண்டு. டில்லி யூனியன் பிரதேசத்திலும், சமீபத்தில் உருவான ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இல்லாத ஓர் அம்சம் புதுச்சேரியில் உண்டு. இங்கு மட்டும்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு காவல்துறை, பொதுச் சட்ட ஒழுங்கு, நிலம், நிர்வாகம் ஆகியவற்றில் அதிகாரங்களை கொண்டிருக்கின்றன.

திங்கள் அன்று நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒருவேளை அரசு கவிழ்ந்தால், திடீர் மறுதேர்தல் வருவதற்குச் சாத்தியம் இருக்கிறது. அப்போது காங்கிரஸை வீழ்த்த நிறைய சட்டசபை உறுப்பினர்கள் தேவைப்படலாம். அப்படி தேர்தல் வரவிருக்கும் பட்சத்தில், மக்கள் மத்தியில் இருக்கும் வேட்பாளரின் பரிச்சயம் மட்டுமே இறுதி துருப்புச் சீட்டு. அங்கே கட்சிகள் போட்டி போட்டாலும், நிஜமான போட்டி கட்சிகளுக்கிடையே அல்ல; தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு இடையேதான். எவ்வளவு தூரம் மக்களிடையே அவர்களுக்கு செல்வாக்கும், பேரும் புகழும் இருக்கிறது என்பதுதான் அவர்களுடைய வெற்றியைத் தீர்மானிக்கும்.

கட்டுரையை எழுதியவர்:ஆர். பிரின்ஸ் ஜெபகுமார்

இதையும் படிங்க:துணைநிலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி -நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details