கொச்சி: பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் பயணமாக நாளை(ஏப்.24) கேரள மாநிலம் செல்கிறார். நாளை கொச்சியில் இளைஞர்கள் கலந்து கொள்ளும் "யுவம்-23" என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பின்னர் வரும் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில், கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதோடு, பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தையும் தொடங்கி வைக்க இருக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், கேரளா வரும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பாஜக அலுவலகத்திற்கு கடிதம் வந்ததாகத் தெரிகிறது. அதில், பிரதமரின் வருகையின்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்போவதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன் நேற்று(ஏப்.22) போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.