ராஞ்சி :இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பழங்குடியின மக்களின் அடையாளம் எனக் கூறப்படும் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 25 அடி உயர உருவச் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கி உள்ள பிரதமர் மோடியை காண, இளம் ரசிகர்கள் விரைந்தனர். தன்னை காண ஆளுநர் மாளிகைக்கு வந்த சிறுவன் மற்றும் சிறுமியுடன் கலகலப்பாக பேசிய பிரதமர் மோடி, குறும்புத்தனமாக இருவருடன் விளையாடினார். நாணயத்தை தன் நெற்றியில் வைத்து குழந்தைகளை ஏமாற்றியும் பிரதமர் மோடி மகிழ்ந்தார்.
இது தொடர்பான காணொலியை பிரதமர் மோடி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பழங்குடியின மக்களின் அடையாளம் மற்றும் சுதந்திர போராட்ட வீரருமான பக்வான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு ராஞ்சியில் பழைய மத்திய சிறைச்சாலை பகுதியில் நிறுவப்பட்டு உள்ள அவரது 25 அடி உயர சிலை மற்றும் பூங்காவில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக பிரதமர் மோடியின் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடியை அடுத்து 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் மோடியின் வாகனம் சென்று கொண்டு இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் அவரது கான்வாயில் நுழைந்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதையும் படிங்க :நடிகர் நானா படேகர் வைரல் வீடியோ விவகாரம் - விளக்கமளித்து மன்னிப்பு!