டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூன் 7) மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, மாநிலங்களுக்கு தேவையான கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து வழங்கும்.
“வருகிற 21ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும். தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீத தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசி அளிக்க சேவை கட்டணமாக தனியார் மருத்துவமனைகள் ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும். இது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் அடுத்த இரு வாரத்தில் வெளியிடப்படும்.
100 ஆண்டுகளில் இல்லாத பெருந்தொற்று
மத்திய அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கும். தடுப்பூசிக்காக மாநிலங்கள் எதையும் செலவிட வேண்டியதில்லை” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 100 ஆண்டுகளில் நவீன உலகம் இதுபோன்ற ஒரு பெருந்தொற்றை கண்டதில்லை. நாட்டில் புதிய மருத்துவமனைகள் உருவாக்கப்படும்” என்றார்.
தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கூறுகையில், “தடுப்பூசிக்கு உலகெங்கும் பெரும் தேவை உள்ளது. ஆனால் உற்பத்தி மிக குறைவாக உள்ளது.
நம்மிடம் தடுப்பூசிகள் இல்லாதிருந்தால் நாட்டில் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். கடந்த 50-60 ஆண்டுகளின் வரலாற்றைப் பார்த்தால், இந்தியா வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பல தசாப்தங்களாக எடுத்துக்கொண்டது உங்களுக்குத் தெரியும்” என்றார்.