டெல்லி:உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச் 10) எண்ணப்படுகின்றன.
முன்னதாக, உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தேர்தல் அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றதாக அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினார். அதேபோல், உபியின் பல்வேறு இடங்களில் ஆளும் கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளில் ஈடுபட முயன்றதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, "2004ஆம் ஆண்டிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குற்றச்சாட்டுக்கு இடமில்லை
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறைக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அறையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு என்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை" என்றார்.