புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதனை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
இந்நிலையில், விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில், "வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
மோடி தலைமையிலான அரசு கவனமாக உள்ளது. பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என நம்புகிறேன். இன்னும் சில காலம் நாம் பொறுத்திருக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
விவசாயிகள் எழுப்பும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலான வரைவு திட்டம் வகுக்கப்பட்டு அவர்களுக்கு அனுப்பப்படும் என அமித் ஷா தெரிவித்திருந்தார்.
ஆனால், வேளாண் சட்டங்களை நீக்குவதில் விவசாயிகள் உறுதியாக இருந்ததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்று நடைபெறவிருந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.