தான் டெல்லியின் மிக நல்ல நண்பர் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கிரெம்ளினில் பெருமையுடன் அறிவித்திருந்தார். 2014இல் பிரேசில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி, “ரஷ்யா எங்கள் சிறந்த நண்பர் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும்” என்று கூறியிருந்தார்.
இரு நாடுகளின் தலைமையும் சோதனையான காலகட்டங்களில் தங்களது நட்பை உறுதிப்படுத்திய நாள்கள் இருந்தன. இருப்பினும், சமீபத்தில் அதில் சில மாற்றங்கள் இருப்பதாகத் தெரிகின்றன.
இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிவருகிறது என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, ரஷ்யா இஸ்லாமாபாத்தை நோக்கி நகரத் தொடங்கியது. அதே நேரத்தில் ரஷ்யாவிடமிருந்து பெறப்படும் அதே வகையான பாதுகாப்பு உபகரணங்களும் சீனாவிற்கும் கிடைத்துவருவதால் இந்தியாவும் பீதியடைந்தது.
இந்த அழுத்தத்தின் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தைகளிலிருந்து இந்தியாவை விலக்கிவைக்க ரஷ்யா உறுதிசெய்ததாகச் செய்திகள் வந்தன. இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற இருந்தது. கரோனா காரணமாகக் கூறப்பட்டபோதிலும், உச்சி மாநாடு ரத்துசெய்யப்பட்டதற்குப் பின்னால் வேறு சில காரணங்கள் இருந்ததாகத் தெரிகின்றன.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறவுள்ள புடின்-மோடி உச்சி மாநாட்டிற்கான தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் 2021 ஏப்ரல் 6ஆம் தேதி டெல்லியில் சந்தித்தனர். 2018ஆம் ஆண்டில், இந்தியா அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் குறித்து எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் ரஷ்யாவுடன் எஸ்-400 தரையிலிருந்து விண்ணில் பாயும் ஏவுகணைகளை வாங்க சம்மதித்தது.
அண்மையில் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு அமெரிக்காவின் எச்சரிக்கைகளைக் கவனத்தில்கொள்ள கவலைப்படவில்லை. இந்தியா-ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர்கள் ஜெய்சங்கர், செர்ஜி லாவ்ரோவ் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று அறிவித்தனர்.
இரு நாடுகளும் உறவில் ஒன்றுக்கொன்று கவனம் செலுத்துகின்றன. உறவுகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள் இருவருக்கும் பயனளிக்கும் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சம்.