தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 2, 2023, 5:46 PM IST

ETV Bharat / bharat

சரத் பவார் பதவி விலகலுக்கு பாஜக காரணமா?

கட்சியைக் காப்பாற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினாரா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. கட்சி எம்.எல்.ஏ.க்கள் விலை போவதைத் தடுக்க சரத் பவார் பதவி விலகியதாகத் தகவல் பரவி வருகிறது.

Sharad Pawar
Sharad Pawar

மும்பை :மூத்த அரசியல் தலைவர் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவுக்கு எதிர்ப்புத்தெரிவித்து அக்கட்சித்தொண்டர்கள் வீதிகளில் இறங்கி கடும்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவில் 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத்தேர்தலுக்குப் பின்னர் அங்கு நிலையான ஆட்சி அமையவில்லை. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்து வந்தது. ஆட்சியைக் கைப்பற்ற சிவசேனா கட்சியை இரண்டாக உடைத்து பாஜக, ஏக்நாத் சிண்டே தலைமையிலான சிவசேனா ஒரு அணியை உருவாக்கியது.

தொடர்ந்து ஏக்நாத் சிண்டே கூட்டணியுடன் கைகோர்த்து மகாராஷ்டிர அரசியலைக் கைப்பற்றியது. தற்போது ஏக்நாத் சிண்டே முதலமைச்சராகவும், தேவேந்திர பட்நாவிஸ் துணை முதலமைச்சராகவும் ஆட்சி நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் தேசியவாத காங்கிரஸையும் கலக்கமடையச் செய்ய பாஜக திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவாருடன் பாஜக தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அஜித் பவாரின் நடவடிக்கைகளும் மாநில அரசியலில் பல்வேறு கிளர்ச்சிகளை உருவாக்கி உள்ளன.

இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த பேரிடியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்து உள்ளார். அவர் கட்சியின் தலைமைப்பொறுப்பில் இருந்து விலகுவதாக மட்டுமே அறிவித்து உள்ளதாகவும், தீவிர அரசியலில் இருந்து அவர் விலகப்போவதாக அறிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

விரைவில் குழு அமைத்து கட்சியின் அடுத்த தலைமையைத் தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என தேசியவாத காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார் பதவி விலகலைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸின் அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கான போட்டி சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது.

கட்சியின் மூத்த தலைவர்கள் பிரஃபுல் பட்டேல், சுப்ரியா சுலே, சஹ்ஹன் புஜ்பால், திலீப் வால்செ பாட்டீல், பவுசியா கான், ஜிதேந்திர அவ்ஹத், அனில் தேஷ்முக், ராஜேஷ் டோப், வித்யா சவான், தனஞ்செய முண்டே, அஜித் பவார் உள்ளிட்டோரிடையே கடும்போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.

அதேநேரம் சரத் பவாரின் பதவி விலகல் கட்சித் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரத் பவார் பதவி விலகலை விரும்பாத தொண்டர்கள் அவர் மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என வீதிகளில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ''Take back your decision", "Sharad Pawar zindabad", "We need you, the country needs you", "We are orphaned", என்ற தலைப்புகளில் பதாகைகளை ஏந்தி கட்சித் தொண்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்குவதைத் தடுக்கவே தனது இறுதி ஆயுதமான கட்சித் தலைவர் பதவியை சரத் பவார் துறந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களில் மகாராஷ்டிர அரசியலை புரட்டிப் போடும் அளவிலான பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகல் - காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details