வாரணாசி:உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த தேர்தல்தான் அங்குள்ள பல கட்சிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க இருக்கிறது. இதனால்தான், ஆளும் பாஜகவே அனைத்து தரப்பிலான வேட்பாளர்களையும் களமிறக்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சியும் தான் வெற்றிப்பெற வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் சாதி, மத காரணிகளை கணக்கிட்டு வேட்பாளர்களையும், கூட்டணியையும் அமைத்துவருகிறது.
கவனிக்கப்பட வேண்டிய வெற்றி
இதற்கிடையில், பல தொகுதிகள் பாஜகவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக உள்ளன. அதில் ஒன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள வாரணாசி தெற்கு சட்டப்பேரவை தொகுதி. இந்தத் தொகுதியில் பாஜக ஓரிரு முறை அல்ல, எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது.
தற்போது, அத்தொகுதியில் எம்எல்ஏவான நீல்காந்த திவாரி, மாநில தொண்டு விவகாரம் மற்றும் சுற்றுலா அமைச்சராக உள்ளார். ஆனால், இவருக்கு முன் ஷ்யாம்தேவ் ராய் சௌத்ரி என்பவர் ஏழு முறை வாரணாசி தெற்கு தொகுதியை வென்றுள்ளார்.
இந்தத் தொகுதியை பொறுத்தவரை, குறிப்பிட சமூகம் அல்லது இந்துக்களை விட இஸ்லாமிய வாக்காளர்களே அதிகம். அப்படியிருந்தும், பாஜக இந்தத் தொகுதியை மொத்தம் எட்டு முறை வென்றது கவனிக்க வேண்டியது. பாஜகவின் இந்த வெற்றி அரசியல் மற்றும் தேர்தல் காரணிகளுக்கு அப்பாற்பட்டது என்றே கூறவேண்டும்.
1989 - 2017: காவிகளின் கோட்டை
வாரணாசி தெற்கு தொகுதி, பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாக விளங்குவதற்கு முக்கிய காரணம் ஷ்யாம்தேவ் ராய் சௌத்ரி என்ற கூற வேண்டும். 1989 முதல் 2012 வரை தொடர்ந்து பாஜகவிற்கு வெற்றி வாங்க தந்த இவருக்கு, கடந்த தேர்தலில் ஓய்வளிக்கப்பட்டு மருத்துவர் நீல்காந்த் திவாரிக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இந்த தொகுதியின் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், உத்தரப் பிரதேசத்தின் முதலாவது முதலமைச்சர் சம்பூரணானந்தா, ஆட்சியைக் கைப்பற்றிய போது இங்குதான் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவருக்கு பின், இங்கு காங்கிரஸ், இடதுசாரிகள் தங்களின் பலத்தை நிரூபித்து வந்தாலும், வலதுசாரிகளின் கைகளே எப்போதும் ஓங்கியிருந்தன.
முக்கியமாக, இந்தத் தொகுதியை சாதி வாரியாக கணக்கிட்டு பார்த்தால் புதிய தகவலை நமக்கு அளிக்கும். வாரணாசி தெற்கு தொகுதியில் மொத்தம் 3.16 லட்சம் வாக்களார்களில், 1.74 லட்சம் ஆண்களும், 1.42 லட்சம் பெண்களும், 31 மூன்றாம் பாலினத்தவர்களும் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பிராமணர் - இஸ்லாமியர் வாக்கு வங்கி
இங்கு பிராமணர்-இஸ்லாமியர் வாக்குகளே வெற்றியைத் தீர்மானிக்கும். வாக்களார் எண்ணிக்கைபடி, பிராமணர்கள் 8 விழுக்காடாகவும், இஸ்லாமியர்கள் 13 விழுக்காடாகவும் உள்ளனர். வாரணாசி தெற்கு தொகுதியில் உள்ள பகுதிகளான தால்மண்டி, ஹதா, ராஜ தர்வாஸா, மதன்பூர், சோனர்பூர் ஆகியவை இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி. பிராமணர்களும் இங்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஏனென்றால், பிராமண வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.