தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 17, 2021, 10:48 PM IST

ETV Bharat / bharat

தமிழ்நாடு நாள் விழாவைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

இந்திய பன்னாட்டு வர்த்தக பொருட்காட்சி 2021- தமிழ்நாடு அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவினை செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்
குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

டெல்லி: டெல்லியில் நடைபெறும் 40ஆவது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சி-2021 முன்னிட்டு "லால்சவுக் " அரங்கில் நேற்று (நவ.16) நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவை செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், ஆண்டுதோறும் இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியானது நவம்பர் 14ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு நடைபெறும் 40ஆவது இந்தியப் பன்னாட்டு வர்த்தகப் பொருட்காட்சியினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.14) அன்று ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயல் தொடங்கி வைத்தார். இப்பொருட்காட்சியில் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள், இந்திய யூனியன் பிரதேசங்கள், அரசு சார்பு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று தங்களது அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், கொள்கைகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தப்பட்டன.

சுய சார்பு இந்தியா

இப்பொருட்காட்சிக்கான கருப்பொருள் "சுய சார்பு இந்தியா" (Self Reliant India) ஆகும். இதன் மூலம் நம் இந்தியத் திருநாட்டையும், இந்திய மக்களை அனைத்திலும் சுயச் சார்புடையதாகவும் தன்னிறைவுப் பெற்றிடச் செய்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள்

தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, தொழில் மற்றும் வணிகத்துறை , தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு மற்றும் அரசுச் சார்புத் துறைகள் பங்கேற்று, தங்கள் துறையின் சாதனைகள், வளர்ச்சித் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் செயல் விளக்க மாதிரிகளைச் சிறப்பான முறையில் நேரடிக் காட்சியாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.

பண்பாட்டு அடையாளங்களை அள்ளிக் கொடுக்கும் கீழடி

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள் குறித்த புகைப்படங்கள், உற்பத்திப் பொருள்கள் ஆகியவை பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. உலக அரங்கில் அனைவரது கவனத்தையும் பெற்று தமிழரின் தொன்மையான பண்பாட்டு அடையாளங்களை அள்ளிக் கொடுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த மாதிரி வடிவம் மக்களை மிகவும் கவர்ந்து தமிழர்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

பெண் தியாகிகளின் புகைப்படங்கள்

75ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ( Azadi Ka Amrit Mahotsav ) தமிழ்நாட்டிலும் சீரோடும், சிறப்போடும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், இந்திய விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், இடுக்கண்கள் ஏற்றும் சொல்லொணாத் தொல்லைகட்கு ஆட்பட்ட தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் விடுதலைப் போரில் தமிழகம் எனும் மகத்தான கண்காட்சியைக் கடந்த 1ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைத்தார்.

அதனடிப்படையில் இந்த வர்த்தகப் பொருட்காட்சியில் தமிழ்நாடு அரங்கில் விடுதலைப் போரில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தியாகிகளின் புகைப்படங்கள், முக்கியத் தியாகச் சீலர்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:ஸ்டாலினுடன் அமித் ஷா பேச்சு

ABOUT THE AUTHOR

...view details