பிகார்: பிகார் மாநிலம், பெட்டயாஹ் நகரைச் சேர்ந்த லோஹா சிங் என்ற மெக்கானிக், கரோனா ஊரடங்கு காலத்தில் யூ-ட்யூப் வீடியோக்களைப் பார்த்து, குறைந்த உற்பத்தி விலையில், புதிய வாகனம் ஒன்றை வடிவமைக்க முயற்சித்துவந்துள்ளார். அதன்படி, 150 சிசி இருசக்கர வாகன இன்ஜினைக் கொண்டு, சிறிய ஜீப்பை வடிவமைக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார். குறுகலான சாலைகளில் கூட செல்லும் அளவுக்கு தனித்துவமான ஜீப்பை மும்முரமாக உருவாக்கி வந்தார்.
இந்த நிலையில், யூ-ட்யூப் வீடியோக்களின் உதவியோடு தற்போது சிறிய ஜீப்பை உருவாக்கிவிட்டதாக லோஹா சிங் தெரிவித்துள்ளார். இருசக்கர வாகன இன்ஜினில் இயங்கும் இந்த ஜீப்பில் 4 இருக்கைகள், 6 கியர்கள், செல்ஃப் ஸ்டார்ட், பவர் டில்லர் சக்கரங்கள் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளதாகவும், இந்த பவர் டில்லர் சக்கரங்கள் தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் கூட ஜீப்பை சீராக ஓட வைக்கும் என்றும் தெரிவித்தார்.