தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 12, 2023, 9:32 PM IST

ETV Bharat / bharat

மகாராஷ்டிர அரசியல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு - ஏக்நாத் ஷிண்டேவை சாடிய உத்தவ் தாக்கரே!

உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில், பாஜகவுடன் அதிருப்தி எம்.எல்.ஏக்களை கூட்டுசேர்த்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சட்டப்பேரவை உறுப்பினர்களை உத்தவ் தாக்கரே கடுமையாக சாடியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மும்பை:மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகளின் அரசு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆட்சியில் இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்கள், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அதிருப்தியில் இருந்தனர்.

இதனால் அப்போதைய துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால், ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். பின்னர், அந்த 16 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

இந்தச் சூழலில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே வழக்குத் தொடர்ந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவில்லை. இதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல் உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மறுதினமே ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்து, மகாராஷ்டிராவில் புதிய அரசை அமைத்தனர். ஆட்சி மாற்றம் தொடர்பாக உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கினை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா ஆகியோரது அமர்வு விசாரணை செய்து நேற்று ( மே 11 ) தீர்ப்பு வழங்கியது.

அந்த தீர்ப்பில், “உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் ராஜினாமாவை ரத்து செய்துவிட்டு அவரை மீண்டும் முதலமைச்சராக நியமிக்க வாய்ப்பில்லை. அப்போதைய ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ்யாரி, உத்தவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது தவறானது. இதற்கு, அவர் வலுவான காரணத்தை கூறவில்லை.

இருந்தபோதிலும், உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அரசு அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை. தற்போதைய சபாநாயகர் ராகுல் நாவேகர், சிவசேனாவின் கொறடாவாக ஷிண்டே அணியைச் சேர்ந்த பகத் கோகவலேவை அங்கீகரித்தது தவறான முடிவு.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 16 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் நபம் ரெபியா தீர்ப்பை மறு ஆய்வு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து 7 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது. இதன் அடிப்படையில் 16 சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி நீக்கம் தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுக்கலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு குறித்து அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழு திருப்தி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து உத்தவ் தாக்கரே கூறும்போது, “தார்மீகப் பொறுப்பேற்று ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். இது குறித்து சட்டசபை சபாநாயகர் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஆளுநரின் பங்கு மிகவும் கேவலமானது” என விமர்சித்துள்ளார்.

மேலும், “அனில் தேசாய் மற்றும் அனில் பராப் ஆகியோர் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக கடுமையாக உழைத்ததற்கு நன்றி. துரோகிகள் மூலம் பாஜக சதி செய்கிறது” என்றார்.

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து அனில் பராப் கூறுகையில், “ உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பின் மூலம் சவுக்கடி யாருக்கு என்பது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்றைய தீர்ப்பு குறித்து சபாநாயகருக்கு நாங்கள் கடிதம் எழுதவுள்ளோம். ஒரு குழுவின் தலைவரை நியமிக்க கட்சித் தலைவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உத்தவ் தாக்ரே - சரத் பவார் - நிதிஷ் குமார் சந்திப்பு - பாஜகவுக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சிகள்!

ABOUT THE AUTHOR

...view details