மும்பை: கார்டோலியா குரூஸ் போதைப் பொருள் வழக்கில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை, சிக்க வைக்காமல் இருக்க, போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே, 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், மே 22ஆம் தேதி வரை, அவர் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ எவ்வித கட்டாய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை 2021-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி போதை பொருள் வழக்கில் கைது செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான், 3 வாரங்களுக்கு பிறகு போதைப் பொருள் வைத்து இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க ஷாருக்கானிடம், 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக, சமீர் வான்கடே மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்த நிலையில் சமீர் வான்கடே மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், தனக்கு எதிரான சி.பி.ஐ. வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐ.க்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஆர்யன் கானை கைது செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் சமீர் வான்கடே குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ சிறப்பு வக்கீல், ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் பிரிவு 17 ஏ பிரிவின்படியே, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி பெற்று அதன்படியே, பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.