தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எல்கர் பரிஷத் கலவர வழக்கு: பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை...! - என் ஐ ஏ வழக்கு

எல்கர் பரிஷத் வழக்கில் கைதான பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை
ஆனந்த் டெல்டும்டே ஜாமீனில் விடுதலை

By

Published : Nov 27, 2022, 11:58 AM IST

மும்பை: எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டம் உபா-வில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே(Anand Teltumbde) மும்பை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை பீமா கொரேகான்(Bhima Koregaon) பகுதியில் நடந்த தலித் சமூகத்தினரின் கூட்டத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி பேராசியர் மற்றும் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டேவை, பயங்கரவாத தடுப்பு சட்டமான உபா-வில் என்.ஐ.ஏ. கைது செய்தது.

சட்டமேதை அம்பேத்கரின் குடும்பத்தை சேர்ந்தவரான ஆன்ந்த் டெல்டும்டே, உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 2020 முதல், ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளாக சிறையில் இருந்த ஆனந்த் டெல்டும்டேவின் ஜாமீன் மனுவுக்கு அனுமதி அளித்து அவரை விடுதலை செய்ய கடந்த 18ஆம் தேதி, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், ஆனந்த் டெல்டும்டேவின் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ. மேல் முறையீடு செய்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது.

என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் தலித் சமூகத்தினரை அணி திரட்டியது, ஆனந்தின் சகோதரர் மிலிந்த் டெல்டும்டே மாவோயிஸ்ட் அமைப்பின் தலைவராக இருந்தது, தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) பிரிவில் இருந்து ஆனந்திற்கு வந்த கடிதம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஆனந்த் தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் கபில் சிபில், என்.ஐ.ஏ. தரப்பிலான குற்றச்சாட்டுகள் வாய்வழி மற்றும் போதிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆனந்த் டெல்டும்டே மீது போடுவதற்கான காரணம் என்ன? என்றும், மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் ஒருபிரிவினரை அணிதிரட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டில், அணிதிரட்டல் செய்தால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய முகாந்திரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

மேலும் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முன்வரவில்லை என்று கூறி என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நவிமும்பை, தலோஜா மத்திய சிறையில் இருந்த ஆனந்த் டெம்டும்டே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இதையும் படிங்க:பிபா உலககோப்பை: "ரவுண்ட் 16" சுற்றுக்கு முதல் அணியாக பிரான்ஸ் தகுதி

ABOUT THE AUTHOR

...view details