தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் சரிவு

இந்தியாவில் பேறுகாலத்தின்போது ஏற்படும் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

By

Published : Nov 30, 2022, 9:31 PM IST

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் சரிவு
இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் சரிவு

டெல்லி:இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2014-16ஆம் ஆண்டுகளில் 1 லட்சம் குழந்தை பிறப்புக்கு 130 என்ற அளவில் இருந்த பேறுகால தாய்மார்கள் இறப்பு விகிதம் 2018-20 காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவாக 97 என குறைந்துள்ளது. மாதிரி புள்ளிவிவர பதிவு அடிப்படையில், 2014-16ஆம் ஆண்டில் பேறுகால இறப்பு 130ஆகவும், 2015-17ஆம் ஆண்டு காலகட்டத்தில் 122-ஆகவும், 2016-18 காலகட்டத்தில் 113ஆகவும், 2017-19 காலகட்டத்தில் 103ஆகவும், 2018-20ஆம் காலகட்டத்தில் 97ஆகவும் குறைந்துள்ளது.

தேசிய சுகாதாரக் கொள்கையின் அடிப்படையில், 1 லட்சம் பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 100-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியா எட்டியுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் குழந்தை பிறப்புகளுக்கு பேறுகால இறப்பை 70-க்கும் கீழ் குறைக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா தற்போது செயல்படுகிறது. நீடித்த வளர்ச்சி இலக்கை எட்டி மிகச்சிறப்பான முறையில் செயல்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை தற்போது 6-லிருந்து 8-ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலங்களில் சராசரியை விட குறைவான பேறுகால இறப்பு விகிதம் உள்ளது. அதன்படி கேரளா 19, மகாராஷ்டிரா 33, தெலங்கானா 43, ஆந்திரா 45, தமிழ்நாடு 54, ஜார்க்கண்ட் 56, குஜராத் 57, கர்நாடகா 69 என்ற அளவில் பேறுகால இறப்பு விகிதம் உள்ளது.

2014ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், தரமான பேறுகால சிகிச்சையும், பராமரிப்பும் வழங்கப்படுகிறது. ஜனனி சிசு சுரக்ஷா கார்யக்ரம், ஜனனி சுரக்ஷா யோஜனா, சுரக்ஷித் மாத்ரித்வ ஆஷ்வாசன், பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வ அபியான் ஆகிய திட்டங்களும் பேறுகால இறப்பை குறைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. பேறுகால இறப்பை குறைப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஒருபகுதியாக 2030-ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே பேறுகால இறப்பை 70-க்கும்கீழ் குறைத்து, மேலும் பாதுகாப்பான பேறுகால பராமரிப்பை வழங்கும் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், இது மிகவும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. இந்த மாற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். மகளிருக்கு அதிகாரமளித்தல் தொடர்பான அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து, நமது செயல்பாடுகள் வலுவாக உள்ளன" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பாலியல் வன்கொடுமைகளை தடுக்க "ஆன்டி ரேப் ஸ்மார்ட் ஃபுட் வேர்" - பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details