பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவில் டானாபூர் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்ற நபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அதிகா சவுத்ரி சிங் என்ற திருநங்கையை சந்தித்துள்ளார். அதிகா சவுத்ரி பீகாரின் தர்பங்கா நகரைச் சேர்ந்தவர். இருவரும் நட்பாகப் பழகி வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் காதலித்து வந்தது ரவிக்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகா சவுத்ரியை சந்திக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது என்று கூறி ரவிக்குமாரை மிரட்டியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 25ஆம் தேதி உள்ளூர் கோயில் ஒன்றில் வைத்து, ரவிக்குமார், அதிகா சவுத்ரி இருவரும் திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. திருமணம் முடிந்தவுடன் இருவரும் ரவிக்குமாரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, ரவிக்குமாரின் தந்தை சத்யேந்திர சிங், தாய் மற்றும் மூத்த சகோதரர் தஞ்சய் சிங் மூவரும் சேர்ந்து, இருவரையும் அடித்து வெளியே துரத்தியுள்ளனர். இதையடுத்து, இருவரும் வேறு பகுதிக்கு சென்று குடியிருந்துள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த 13ஆம் தேதி ரவிக்குமார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அவரை கொலை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது. ரவிக்குமார் அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைத்துள்ளார்.