டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று (பிப்.11) நாடாளுமன்றத்தின் மக்களவையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசினார். அப்போது, “நேற்று (பிப்.10) பேசிய பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள் பற்றி பேசமாட்டார்கள். நான் விவசாய சட்டங்களில் உள்ள கூறுகள், உள்கருத்துகள் பற்றி பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மத்திய அரசின் முதல் விவசாய சட்டம் விவசாய சந்தைகளை ஒழித்து கட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. இரண்டாவது சட்டம், பழங்கள், காய்கறிகள் என அனைத்து விவசாயப் பொருள்களையும் பெருநிறுவன முதலாளிகள் தேவைக்கு அதிகமாக சேமித்துவைக்க இடமளிக்கிறது. இதனால் அவர்களுக்கு என்ன தேவையை அதை பதுக்குவார்கள்.
மூன்றாவது சட்டம் என்ன கூறுகிறது தெரியுமா? நமது விவசாயிகள் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களிடம் அடிப்படை ஆதார விலைக்காக கை ஏந்த வேண்டும். விவசாயிகள் நீதிமன்றம் செல்ல அனுமதியில்லை.