புதுச்சேரி: கரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்றவும் அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில், வாராந்திர கரோனா தொற்று மேலாண்மை சீராய்வுக் கூட்டம் நேற்று (ஜூன் 17) துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமை தாங்கினார். மேலும் இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் அஷ்வனி குமார், காவல் துறை கூடுதல்இயக்குநர் ஆனந்த மோகன், உள்ளாட்சித் துறைச் செயலர் வல்லவன், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அப்போது தற்போதைய கரோனா நிலவரம், தடுப்பூசி நிலவரம், கறும்பூஞ்சை நோயின் தாக்கம், மருந்துகளின் கையிருப்பு ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய தமிழிசை, “புதுச்சேரியில் கரோனா தொற்றுப் பரவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. ஆனாலும் அது முற்றிலுமாகக் குறையும் வரையில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கரோனா நோய்த்தொற்று, தடுப்பூசி ஆகிய இரண்டு கூறுகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்தால் ஒழியே நோய்த்தொற்றை குறைப்பது அரிது. இலவசங்கள், பரிசுத் திட்டங்கள் மூலமாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்களை ஊக்கப்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.