தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2023, 11:06 AM IST

ETV Bharat / bharat

அமெரிக்காவில் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் முயற்சி - காலிஸ்தான் அமைப்பினர் கிளர்ச்சி!

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருக்கு மிரட்டல் விடுத்து, இந்தியத் தூதரகத்திற்குள் நுழைந்து காலிஸ்தான் அமைப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Etv BHarat
Etv BHarat

வாஷிங்டன்:அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் திரண்டு, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்துவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், இந்தியத் தூதரகத்தை தகர்க்கவும் முயன்ற காலிஸ்தான் அமைப்பினரை அமெரிக்க ரகசியத் துறை மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சீக்கியர்களுக்கு என தனி நாடு என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் அமைப்பினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பிரிவான வாரீஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவர், அம்ரித் பால் சிங். பயங்கரவாத நடவடிக்கைகளில் அம்ரித் பால் சிங் ஈடுபடுவதாகப் பஞ்சாப் போலீசார், அவரை கைது செய்ய முற்பட்டனர். போலீசார் கைது நடவடிக்கையில் இருந்து அம்ரித் பால் சிங் தப்பி தலைமறைவானதாக கூறப்படுகிறது.

அதேநேரம் போலீசார், தன் மகனை கைது செய்து விட்டு நாடகமாடுவதாக அம்ரித் பால் சிங்கின் தந்தை பஞ்சாப் உயர் நிதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே அம்ரித் பால் சிங் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளி நாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் காலிஸ்தான் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், வெளிநாடுகளில் அந்த அமைப்புக்கு எந்த தடையும் இல்லை எனக் கூறப்படும் நிலையில், அதன் காரணமாக அம்ரித் பால் சிங் ஆதரவாளர்கள் தொடர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலிஸ்தான் அமைப்பு ஆதரவாளர்கள், தூதரகம் முன் இருந்த தேசியக் கொடியை அகற்றினர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூதரகத்தின் ஜன்னல், கதவு கண்ணாடிகளை அடித்து நொறுக்கியும், கற்களை வீசியும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது.

இந்தச் சம்பவத்திற்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், தூதரகம் மற்றும் அங்கு பணி புரியும் இந்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பினை பலப்படுத்தக் கோரியும், அங்குள்ள நிலவரம் குறித்து தகவல் அளிக்குமாறும் டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரை அழைத்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்தியத்தூதரகம் மீது தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தூதரகம் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியது. இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன் மீண்டும் காலிஸ்தான் அமைப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட முயன்று உள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரண்ஜித் சிங் சாந்துவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தியத் தூதரகத்தை காலிஸ்தான் அமைப்பினர் தாக்கி தகர்க்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து விரைந்த அமெரிக்க ரகசியத் துறை மற்றும் உள்ளூர் போலீசார் காலிஸ்தான் அமைப்பினரின் பயங்கரவாத முயற்சிகளை தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க:LVM3 Rocket Launch: 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் எல்விஎம்-3 ராக்கெட்!

ABOUT THE AUTHOR

...view details