வயநாடு (கேரளா): இசைஞானி இளையராஜாவின் பாடலுக்கு மயங்காத மனங்கள் இருக்காது. இசை என்றால் இளையராஜாதான் என்ற எண்ணம் நம் மனங்களில் காலூன்றி நிற்கிறது. ஆனால் அவரே தனது இதயம் ஒரு கோயில் பாடலில்.. உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே என்ற வரிகளை சேர்த்து இசை அனைவருக்கும் பொதுவானது. அதை வாசிக்க ஒரு ஞானிதான் தேவை என்பது இல்லை எனக்கூறியிருப்பார். அதற்கு ஏற்றார்போல் கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சிறுவன் ஒருவன் கையில் கிடைக்கும் பொருட்களையேல்லாம் வைத்து தாளம் தட்டி இசையமைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அபிஜித்.. வயனாடு மாவட்டம் அம்மனி பழங்குடியின மக்கள் வசிக்கும் காலனியை சேர்ந்தவர். தார்ப்பாயால் மூடப்பட்ட குடிசை வீடு.. அந்த வீட்டிற்குள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் என ஐந்து பேர் வாழும் ஏழை மாளிகை. தொலைக்காட்சியோ, ரேடியோவோ அல்லது மொபைல் ஃபோனோ கூட கிடையாது. ஒரு வேளை உணவுக்கு கூட கூலி வேலையை நம்பி வாழும் குடும்பம். இப்படிப்பட்ட சூழலில் பிறந்து வாழ்ந்து வரும் அபிஜித்.. தனக்குள் ஒரு இசை ஞானம் இருக்கிறது என்பதை கூட அறிந்துகொள்ளாமல் தாளம் தட்டி இசையமைக்கிறார் தனது பள்ளி ஆசிரியரின் பாடல் வரிகளுக்கு. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே அபிஜித்தின் வீடு தேடி சென்றது அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்துகள்.