தமிழ்நாடு

tamil nadu

வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தல் என வதந்தி... விவிபாட், வாக்கு இயந்திரங்களை வீதியில் வீசி மக்கள் கலவரம்!

By

Published : May 10, 2023, 6:32 PM IST

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை கடத்த முயன்றதாக பொது மக்கள் கலவரத் தாக்குதலில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலரின் காரை தாக்கிய கிராம மக்கள், விவிபாட் மற்றும் வாக்கு இயந்திரங்களை வீதிகளில் வீசினர்.

Karnataka Election
Karnataka Election

விஜயபுரா :கர்நாடக மாநிலம், பாகேவாடி தாலுகா, மாசபினலா கிராமத்தில் தேர்தல் அலுவலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்கு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிரபலங்களும் தங்களது வாக்குகளை ஆர்வமாக செலுத்தினர். ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் தீவிர முனைப்புடன் காத்திருக்கின்றன.

இந்நிலையில், விஜயபூர் மாவட்டம், பாகேவாடி தாலுகாவில் உள்ள மாசபினால கிராமத்தில் பொதுமக்கள் வாக்குகளை செலுத்தி வந்துள்ளனர். அப்போது வாக்குச்சாவடியில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பொதுமக்கள் கேட்டும் அதற்கு அதிகாரிகள் முறையாகப் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வாக்குகள் பதிவான இயந்திரங்களை அதிகாரிகள் ரகசியமாக வேறு இடத்திற்கு மாற்றுவதாகக் கூறி பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களை வீதியில் வீசி மக்கள் கலவரத்தில் ஈடுபடத் தொடங்கினர். மேலும் தேர்தல் அலுவலரின் காரை தாக்கிய மக்கள் அதை அடித்து உடைத்து நொறுக்கினர். சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பொது மக்களிடம் விளக்கம் அளித்து உள்ளனர்.

கலவரத் தாக்குதலில் ஈடுபட்டதாக பொது மக்கள் 30 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், பதம்நாபநகர் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பப்பாயா கார்டன் பகுதியில் வாக்குச்சாவடி முன் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களைச் சுற்றிவளைத்த 30 இளைஞர்கள் அவர்களைத் தடியால் தாக்கியதாக சொல்லப்படுகிறது. கலவரத் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் கோலார் தாலுகாவில் உள்ள வாக்குச்சாவடி முன் நின்றவர்களை போலீசார் விரட்டியபோது அரசியல் பிரமுகர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. காயம் அடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க போலீசார், முயற்சித்த நிலையில் கிராம மக்கள் போலீசார் வாகனத்தை முற்றுகையிட்டு உள்ளனர். தொடர்ந்து காயம் அடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகப் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க :Karnataka Election 2023: நண்பகல் 3 மணி நிலவரப்படி 52.18% வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details