பெங்களூரு : காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியமில்லை என்றும், நீர் இருப்பு, குடிநீர் தேவை, விவசாயிகளின் உணர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடத் தயாராக இருப்பதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள காவிரி நீரை உடனடியாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் திறப்பு குறித்து பேசிய கர்நாடக துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை இலாக்காவை கைவசம் வைத்து உள்ள டி.கே சிவகுமார், நீதிமன்றத்தில் அரசின் நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக தெரிவித்து உள்ளார்.
மேலும், காவிரி ஆற்றில் உள்ள கேஆர்எஸ் அணை மற்றும் பிற அணைகளுக்கு மழை மற்றும் நீர்வரத்து குறித்த பதிவுகள் இருப்பதாகவும், பயிர் நடவு குறித்து விவசாயிகளுக்கு முன்னெச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளதாக கூறினர். மேலும் கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராய சுவாமியும் பயிர்களை நட வேண்டாம் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இரு மாநிலங்களும் நெருக்கடியான சூழலை சந்தித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு இவ்வளவு அவசரமாக நாட வேண்டிய அவசியமில்லை என்றார். மேலும் தண்ணீர் இருப்பு, மாநிலத்தின் குடிநீர்த் தேவை, விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு தமிழகத்துக்குத் தண்ணீர் கொடுக்கத் தயார் என்றும் சிவகுமார் கூறினார்.