தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 9:58 PM IST

ETV Bharat / bharat

விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு பரப்பிய நடிகை கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!

சண்டிகர் : டெல்லி விவசாயிகள் நடத்திய போராட்டக் களத்தில் ‘ஷாஹீன் பாக்கின் பாட்டி’ பில்கிஸ் பானு இருப்பதாகக் கூறி பொய் பரப்புரை செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்திடம் விளக்கம் கேட்டு பஞ்சாபைச் சேர்ந்த வழக்குரைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

டெல்லி விவசாயிகள்  போராட்டம் குறித்து அவதூறு பரப்பிய நடிகை கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!
டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து அவதூறு பரப்பிய நடிகை கங்கனா மன்னிப்புக் கேட்க வேண்டும்!

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த போராட்டத்தில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்றிருந்த பில்கிஸ் பானு பாட்டியும் (82) கலந்துகொண்டிருப்பதாகக் கூறி ஒரு புகைப்படத்தை கடந்த சில நாள்களாக பலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

அந்தப் பாட்டி குறித்த சமூக வலைதளப் பதிவுகள் அனைத்திலும் இரண்டு புகைப்படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று, ஷாஹீன் பாக் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், மற்றொன்று, பஞ்சாபிலிருந்து விவசாயிகள் டெல்லி நோக்கிப் புறப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பாட்டியின் புகைப்படங்களைப் பகிரும் பலரும், காசு கொடுத்தால் எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்வார் இந்தப் பாட்டி. பாட்டியின் தொடர்புக்கு, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அல்லது காங்கிரஸ் அலுவலகத்தை அணுகலாம் என்றெல்லாம் அவதூறு பரப்பும் வகையில் எழுதினர்.

அந்த பதிவை பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “டைம் பத்திரிகையில் மிகவும் சக்திவாய்ந்த இந்தியர்களின் பட்டியலில் இடம்பெற்ற அதே பாட்டிதான் இவர். 100 ரூபாய் கொடுத்தால் போராட்டத்துக்கு வருவார்'' என்று கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார்.

இந்த இரண்டு புகைப்படங்கள் குறித்த உண்மைத் தன்மையை வெளிக்கொணர முடிவெடுத்த சிலர், ரிவர்ஸ் இமேஜ் தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திப் பார்த்தபோது அந்த படங்களில் இருப்பவர்கள் இருவரும் வெவ்வேறானவர்கள் என்பது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் அவதூறு பரப்பும் வகையில் பரப்புரை செய்த பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பஞ்சாபைச் சேர்ந்த வழக்குரைஞர் ஹர்கம் சிங் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வழக்குரைஞர் ஹர்கம் சிங் கூறுகையில், “ மொஹிந்தர் கவுரை, பில்கிஸ் பானோ என்று தவறாக அடையாளம் காட்டி, சமூக ஊடகங்களில் தவறான இடுகைகள் பகிரப்பட்டு வருகின்றது. அந்த பதிவு குறித்து எந்தவொரு ஆதாரமும் இன்றி, பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அதை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது இத்தகைய இழிவான பதிவின் மூலமாக, சமூக நலனுக்காக உரிமைகளுக்காகப் போராடுவோரை அவமதிப்பு செய்துள்ளார். விவசாயிகளால் நடத்தப்படும் போராட்டம் பணம் கொடுத்து நடத்தப்படுகிறது என குறைமதியோடு அவர் கூறியுள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் பதிருந்திருந்த ட்விட்டர் பதிவு

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பதிவில், மூதாட்டி கவுரை 100 ரூபாய்காக போராட வந்தவராக (கூலி ஆர்ப்பாட்டக்காரர்) என்று அடையாளப்படுத்தி அவமதித்துள்ளார். பதிந்தாவைச் சேர்ந்த விவசாயி லாப் சிங் நம்பர்தரின் மனைவியான மொஹிந்தர் கவுரும் ஒரு விவசாயி தான். கங்கனா அதற்கு ஏழு நாள்களுக்குள்ளாக மன்னிப்புக்கேட்க வேண்டும்.

நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை காக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நிலத்தைக் காக்க, வளத்தைக் காக்க போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்தில், ஏற்கெனவே ஏராளமான விவசாயிகள் உயிர்களை இழந்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய தியாகம் நிறைந்தப் போராட்டத்தை, விவசாயிகளை கங்கனா கேலி செய்துள்ளார். இந்த செயல் மூலமாக ரணாவத், தன்னுடைய கெளரவத்தையும், அடையாளத்தையும் குறைத்துக்கொண்டார்” என கூறினார்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் இன்று 1,428 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details