தமிழ்நாடு

tamil nadu

ஜோத்பூர் கலவரம் - 97 பேர் கைது

By

Published : May 4, 2022, 1:45 PM IST

ஜோத்பூரில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டதோடு, ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோத்பூர் கலவரம்
ஜோத்பூர் கலவரம்

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற மதக் கொடியேற்றும் நிகழ்வில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக மாறி, கல்வீச்சு தாக்குதல் நடந்தது. கலவரம் தொடர்பாக சிலர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணைய சேவையை முடக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதையடுத்து கலவரத்தில் தொடர்புடையதாக கூறி ஜோத்பூரில் 97 பேர் கைது செய்யப்படுள்ளதாக செவ்வாய் கிழமை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர் காவல் அதிகாரிகள் பாதுகாப்புக் கருதி இங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டுள்ளனர் என மாவட்ட தலைமை காவல் அதிகாரி ஹவா சிங் குமாரியா கூறினார்.

ஜோத்பூர் கலவரம்

ஆளுநருக்கு கடிதம்: இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் பூனியா, ஆளுநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஜோத்பூரில் நடந்த வன்முறை தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதை உறுதி செய்ய அரசுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கவும் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் சம்பவங்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் ஆளுநருக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கலவரத்திற்கான காரணம்:முதலமைச்சர் அசோக் கெலாட்டின் சொந்த மாவட்டமான ஜோத்பூரில் உள்ள ஜலோரி கேட் வட்டத்தில் ஈத் தொழுகையைத் தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. கும்பலை கலைக்க காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

ஜலோரி கேட் சந்திப்பு வட்டத்தில் உள்ள பல்முகந்த் பிஸ்ஸாவில் வெவ்வேறு கொடிகளை உயர்த்தியதில் இரு குழுக்களிடையே கல் வீச்சு சம்பவம் நடந்தது. தொடந்து, திங்களன்று மாவட்டத்தில் நிலவிய பதட்டமான சூழ்நிலையைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதே சமயம் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் போட்டித் தேர்வு எழுதுபவர்கள், ஆசிரியர்கள், ஊரடங்குச் சட்டத்தின் போது செல்ல அனுமதிக்கப்படுவர் என காவல் ஆணையரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மருத்துவ அவசர சேவைகள், மருத்துவ ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், நீதித்துறை தொடர்பான அதிகாரிகள், ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடையாள அட்டைகள் அல்லது ஆவணங்களைக் காட்டி விட்டு செல்லலாம் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் வேண்டுகோள்: இதற்கிடையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காவல்துறையிடம் சமூக விரோதிகளை அடையாளம் காண உத்தரவிட்டுள்ளார். மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அவர், மதம், ஜாதி, வகுப்பு வேறுபாடின்றி, குற்றச் செயல்களில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களைத் தப்ப விடக்கூடாது என்றும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பொது மக்களிடம் அமைதி காக்க வேண்டும் எனவும் அந்த கூட்டத்தில் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: வீடியோ: போக்குவரத்து காவலருடன் மல்லுக்கட்டிய கார் டிரைவர்

ABOUT THE AUTHOR

...view details