தமிழ்நாடு

tamil nadu

பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து நுபுர் சர்மாவை கொல்ல திட்டமிட்டவர் கைது

By

Published : Aug 13, 2022, 2:14 PM IST

முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்த நுபுர் சர்மாவை கொல்ல பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து சதித்திட்டம் தீட்டிய இளைஞரை, பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் உத்தர பிரதேசத்தில் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட முகமது நதீம்
கைதுசெய்யப்பட்ட முகமது நதீம்

லக்னோ:பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இஸ்லாமிய நாடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, நூபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அதேநேரம் அவரை கைது செய்ய வலியுறுத்தி டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. நாடு முழுவதும் அவர் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை, பயங்கரவாத எதிர்ப்பு குழு காவலர்கள் நேற்று (ஆக. 12) கைது செய்தனர்.

இதுகுறித்து, உத்தர பிரதேச சட்டம் ஒழுங்கு டிஜிபி, பிரசாந்த் குமார் வெளியிட்ட செய்திகுறிப்பில், கைது செய்யப்பட்டவரின் பெயர் முகமது நதீம் எனவும் 25 வயதான இவர் உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள குண்ட காலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட முகமது நதீம்

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து நுபுர் சர்மாவை தற்கொலைப்படை தாக்குதல் மூலம் கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரிய வந்தது. போலீசார் அவரின் செல்ஃபோன் உரையாடல்கள், குறுந்தகவல் ஆகியவற்றை அவரின் செல்ஃபோனில் இருந்து மீட்டெடுத்துள்ளனர். அவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து இரண்டு சிம் கார்டுகள், வெடிகுண்டு பயன்பாடு குறித்த வழிமுறை கொண்ட புத்தகம் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவர் மீது உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் லக்னோவில் உள்ள பயங்கரவாத தடுப்புக் குழு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 70 பக்கம் கொண்ட வெடிகுண்டு பயன்பாடு வழிமுறை புத்தகத்தில் (Explosive Course Fidae Force) ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளில் இருந்துள்ளது. அதில், கொரில்லா தாக்குதலின்போது எந்த வெடிகுண்டு பயன்படுத்துவது?, அதிகபட்ச சேதாரத்தை உண்டாக்க எந்த வகையில் வெடிகுண்டை தயாரிப்பது போன்ற விளக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நதீமிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையின்போது, 2018ஆம் ஆண்டில் இருந்து, தான் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்துடன் தொடர்பில் இருந்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. மேலும், பயங்கரவாத அமைப்பினர், சிறப்பு பயிற்சிக்காக அவரை பாகிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வரும்படி அழைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. மேலும், அவர் விசாவிற்காக காத்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நதீமிடம் கைப்பற்றப்பட்ட 70 பக்கம் கொண்ட வெடிகுண்டு பயன்பாடு வழிமுறை புத்தகம்

2018ஆம் ஆண்டில் இருந்து முகமது நதீம், வாட்ஸ்அப், டெலிகிராம், பேஸ்புக் மெசஞ்சர், கிளப்ஹவுஸ் ஆகிய சமூக வலைதளங்கள் வழியாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்து தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ராணுவ துப்பாக்கியை பயன்படுத்திய விவகாரத்தில் 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details