தமிழ்நாடு

tamil nadu

SSLV D2: 3 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்!

By

Published : Feb 10, 2023, 10:39 AM IST

Updated : Feb 10, 2023, 10:54 AM IST

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களுடன், மேம்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டன.

எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்
எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்

ஸ்ரீஹரிகோட்டா:புவி கண்காணிப்பு, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய பயன்பாட்டுக்காக, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி ஆகிய ராக்கெட்களில் விண்ணுக்கு ஏவி வருகிறது. அதேநேரம் 500 கிலோ எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோள்களை அனுப்ப, எஸ்.எஸ்.எல்.வி - 1 என்ற ராக்கெட்டை கடந்த ஆண்டு வடிவமைத்தது.

பரிசோதனை முயற்சியாக, எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட், இரண்டு செயற்கைக்கோள்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்டபடி புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த முடியவில்லை.

இதையடுத்து எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் மேம்படுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்-07, ஜானஸ்-1, ஆசாதிசாட்-2 ஆகிய 3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. இதற்கான கவுன்டவுன் இன்று(பிப்.10) அதிகாலை தொடங்கியது. இந்நிலையில் காலை 9.18 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தம்: ராக்கெட் ஏவப்பட்ட 15வது நிமிடங்களில் அதில் இருந்து பிரிந்த 3 செயற்கைக்கோள்களும், புவியில் இருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திட்டமிடப்பட்ட வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இதையடுத்து விஞ்ஞானிகள் உற்சாக குரல் எழுப்பி, வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இஸ்ரோ தலைவர் மகிழ்ச்சி: "செயற்கைக்கோள்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "3 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோள்களை தயாரித்த குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை எஸ்.எஸ்.எல்.வி.-டி1 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இந்தமுறை வெற்றி காணப்பட்டுள்ளது" என்றார்.

என்னென்ன பயன்கள்?:இ.ஓ.எஸ்-07, ஜானஸ்-1, ஆதிசாட்-2 என மொத்தம் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. இதில் இ.ஓ.எஸ்-07 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் எதிர்கால தொழில்நுட்ப தேவைக்கான ஆய்வை மேற்கொள்ளும். அமெரிக்காவின் ஜானஸ்-1 செயற்கைக்கோள் மென்பொருள் மேம்பாடு குறித்த பணிகளை செய்யும். சென்னையின் ஸ்பேஸ்கிட் நிறுவனத்தின் ஆசாதிசாட்-2 செயற்கைக்கோளை 750 கிராமப்புற பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். இது தட்ப வெப்பநிலையை ஆராய பயன்படுத்தப்படுகிறது. 3 செயற்கைக்கோள்களின் மொத்த எடை 175 கிலோ ஆகும்.

இதையும் படிங்க: கலப்பு திருமணம் மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க பிஎப்ஐ திட்டம் - ஏடிஎஸ் குற்றப்பத்திரிக்கை!

Last Updated : Feb 10, 2023, 10:54 AM IST

ABOUT THE AUTHOR

...view details