லண்டன்:இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் ட்விட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டரில் பக்கத்தில், ‘இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 7 தசாப்தங்களுக்கும் மேலாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழி நடத்தியதினார். இங்கிலாந்து மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின் போது இரண்டாம் எலிசபெத் உடன் மறக்க முடியாத சந்திப்புகள் நடந்தன. அப்போது நான் அவரது மாட்சிமை கண்டு வியந்தேன். அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில் பிரதமர் மோடி, ‘ராணி இரண்டாம் எலிசபெத் அவரது மாட்சிமை மூலம் இந்த காலத்தின் உறுதியானவராக நினைவுகூரப்படுவார். தனது தேசத்திற்கும் மக்களுக்கும் ஊக்கமளிக்கும் தலைமையை வழங்கினார். பொது வாழ்வில் கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவர் மறைவால் வேதனை அடைந்தேன். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இங்கிலாந்து மக்களுடனும் உள்ளன’ என்று குறிப்பிட்டுள்ளார்.