ஹைதராபாத் (தெலங்கானா): ஹைதராபாத் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக ராணி குமுதினி தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1911ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதியன்று வாரங்கல் மாவட்டத்தில் வதேபள்ளி கிராமத்தில் பிறந்தார். அவர் ஹைதராபாத்தின் முன்னாள் துணை பிரதமர் பிங்கிள் வெனக்தரமண ரெட்டியின் மகள். வனபர்த்தி அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஹைதராபாத் மாநகராட்சியில் சுகாதாரக் குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பின்னர், 1962ஆம் ஆண்டில் முதல் பெண் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1962 முதல் 1964ஆம் ஆண்டு வரை மேயராகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டில் வனபர்த்தி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஹைதராபாத்தின் 2ஆவது பெண் மேயர்
ஹைதராபாத்தில் இரண்டாவது பெண் மேயராக சரோஜினி புல்லாரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1965ஆம் ஆண்டில் காங்கிரசிலிருந்து ஹைதராபாத் மாநகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் நகர மேயரானார். அவர் 1965 முதல் 1969ஆம் ஆண்டு வரை மேயராகப் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டில் ஹைதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், மாலக்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தியுடன் நல்ல நட்புறவைக் கொண்டிருந்த சரோஜினி புல்லாரெட்டி 2001ஆம் ஆண்டில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.