கணவரை இழந்த மனைவி! அமெரிக்கா செல்ல அரசிடம் விசா கோரி வேண்டுகோள் - கணவரை இழந்த மனைவி
ஹைதராபாத்: அமெரிக்காவில் அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டவரின் மனைவி அவசரகால விசா கோரி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![கணவரை இழந்த மனைவி! அமெரிக்கா செல்ல அரசிடம் விசா கோரி வேண்டுகோள் hyderabad man stabbed to death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12:22:48:1604386368-768-512-9242233-571-9242233-1603176852184-3010newsroom-1604043664-605.jpg)
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் முகமது மொஹியூதின் (37). இவரது மனைவி மெஹ்னாஸ் பாத்திமா, இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. மொஹியூதின் அமெரிக்காவின் ஜார்ஜியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் மொஹியூதினிடம் அவரது மனைவி செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் அரை மணிநேரம் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைக்கிறேன் என சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துள்னார். ஆனால் அவரிடமிருந்து நீண்ட நேரம் ஆகியும் எந்த அழைப்பும் வரவில்லை. பின்னர், கணவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார் என்ற தகவல் உறவினர் மூலம் வந்தது. அவரது உடல் காவல்துறையால் மீட்கப்பட்டு, ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மொஹியூதினுக்கு சொந்தம் என யாரும் இல்லை. எனவே எனக்கும் என் தந்தைக்கும் அமெரிக்கா செல்ல அவசரகால விசா ஏற்பாடுகள் செய்து தருமாறு மனைவி மெஹ்னாஸ் பாத்திமா அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா சென்றுதான் அவரது இறுதிச்சடங்குகளை மேற்கொள்ள முடியும் என அவரின் மனைவி வேதனை தெரிவித்துள்ளார்.