புதுச்சேரி:பாஜக சார்பில் ஆதார் ஆணையத்திலிருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று, தொகுதி வாரியாக வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பித்து, அதன் வழியாகத் தேர்தல் பரப்புரை செய்துவருவது குறித்து சிறப்புப் புலனாய்வு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதுச்சேரி தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறை விசாரணை நடத்திவருவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளித்தது.
மேலும், வாக்களர்களுக்கு ஒட்டுமொத்தமாகக் குறுஞ்செய்தி (BULK SMS) மூலம் பரப்புரைசெய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும், அனுமதிபெறாமல் அனுப்பியது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் விளக்கம் கேட்டு பாஜகவிற்கு மார்ச் 7ஆம் தேதி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மார்ச் 8ஆம் தேதி விண்ணப்பித்ததாக பாஜக தரப்பில் சொல்வதுபோல எந்த விண்ணப்பமும் பெறவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. சைபர் குற்றப்பிரிவு விசாரித்துவருவதாகவும், அதன் அறிக்கையைப் பொறுத்து சின்னங்கள் சட்டத்தின்படி தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி வாக்காளர்களின் செல்போன் எண்கள் பாஜகவினருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க ஆதார் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்கக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக ஆதார் ஆணையமும், தேர்தல் ஆணையமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நியாயமான முறையில் நடப்பதை உறுதிசெய்து விரைவில் விசாரணையை முடித்து அறிக்கைத் தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று (மார்ச் 31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்றும் ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல்செய்தார்.