தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!'

ஹைதராபாத்: தெலங்கானா முதலமைச்சர் கேசிஆர் பிறந்தநாள் பரிசாக, அவரது கட்சி உறுப்பினர்கள் வழக்கறிஞரையும் அவரது மனைவியையும் கொலைசெய்துள்ளனர் என பாஜக மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

By

Published : Feb 18, 2021, 2:12 PM IST

advocate
ஹைதராபாத்

ஹைதராபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தவர் வாமன் ராவ். இவரும், இவரது மனைவி நாகமணியும் ஹைதராபாத்திலிருந்து அவர்களது சொந்த ஊரான மந்தானிக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். இவர்களை பெட்டாபள்ளி மாவட்டம் அருகே கல்வாசார்லா நெடுஞ்சாலையில் வழிமறித்த கும்பல் ஒன்று, கொடூரமான முறையில் குத்தித் தாக்கியுள்ளது. இதில் வழக்கறிஞரின் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த வாமன் ராவ் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர், மரண வாக்குமூலத்தில் குந்தா ஸ்ரீனுவின் பெயரைக் கூறியதாகத் தெரிகிறது. குந்தா என்பவர், தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் (டிஆர்எஸ்) முன்னணித் தலைவர் ஆவார். இந்தக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா பாஜக தலைவர் பாண்டி சஞ்சய், வழக்கறிஞர் குடும்பத்தை டிஆர்எஸ் தலைவர் குந்தா ஸ்ரீனுதான் கொலைசெய்தார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "வழக்கறிஞரும் அவரது மனைவியும், டிஆர்எஸ் முன்னணித் தலைவர் குந்தா ஸ்ரீனுவால்தான் கொலைசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அரசின் அட்டூழியங்களுக்கு எதிராகப் போராடிவந்தனர். மாநிலத்தின் பல்வேறு தலைவர்களின் தவறான செயல்கள் குறித்து ஏராளமான தகவல்களை வைத்திருந்தனர்.

உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரியிருந்தனர். அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும், மாநில அரசு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவில்லை. தற்போது அவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

வழக்கறிஞர் காரை வழிமறித்து கொன்ற கும்பல்

கேசிஆர் பிறந்தநாளில், அவரது கட்சி உறுப்பினர்கள் பரிசு அளிக்கும் வகையில், இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போது அவர் பரிசை ஏற்றுக்கொள்வாரா அல்லது இவ்விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடுவாரா என்பது தெரியவில்லை" எனத் தெரிவித்தார். இந்தக் கொலை சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:லஞ்சம் பெற்ற அரசு அலுவலர் பணியிடை நீக்கம் - வைரல் வீடியோ!

ABOUT THE AUTHOR

...view details