தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிஐடி வழக்கு மீதான சந்திரபாபு நாயுடுவின் மனு ஒத்திவைப்பு!

Chandrababu Quash Petition in AP High Court adjourned: ஆந்திர சிஐடி காவல் துறையினர் தன் மீது பதிந்த வழக்கு மற்றும் விஜயவாடா நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனு செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:05 PM IST

Etv Bharat
Etv Bharat

விஜயவாடா (ஆந்திரா): தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு ஆந்திர சிஐடி காவல் துறையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, விஜயவாடா சிறப்பு நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிமன்றம், அவரது வீட்டுக் காவல் மனுவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனையடுத்து, ஆந்திர சிஐடி காவல் துறை தன் மீது பதிந்த வழக்கையும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் அளித்த நீதிமன்றக் காவலையும் ரத்து செய்து உத்தரவிடுமாறு சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று (செப் 13) நடைபெற்றது. அப்போது, சந்திரபாபு தாக்கல் செய்து உள்ள ரத்து மனு மீது பதில் அளிக்க சிஐடி காவல் துறை தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட ஆந்திர உயர் நீதிமன்றம், செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் சிஐடி காவல் துறை தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்டது. அது மட்டுமல்லாமல், இது தொடர்பான வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது. மேலும், சிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட காவல் மனு மீது அதுவரை விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் எந்த விசாரணையும் நடத்தக் கூடாது எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்று, தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாடுக் கழகத்தின் 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தில் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக ஆந்திர சிஐடி காவல் துறையினரால் நந்தியாலா பகுதியில் வைத்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, அவர் ஒரு நாள் முழுவதும் சிஐடி காவல் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டதற்கு மறுநாள் விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர் ராஜமகேந்திரவரம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே, சந்திரபாபு நாயுடுவின் வீட்டுக் காவல் மனுவையும் சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இன்று திரைப்பட முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தைரியத்தையும், தனது ஆதரவையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தனிமையில் ஆபாசப்படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி.!

ABOUT THE AUTHOR

...view details