தமிழ்நாடு

tamil nadu

நாடளுமன்ற பாதுகாப்பு குளறுபடி விவகாரம்: திமுக எம்.பியின் இடைநீக்கம் திடீர் வாபஸ்! என்ன காரணம் தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 9:40 PM IST

நாடாளுமன்றத்திற்கு வராத திமுக எம்.பி எஸ்.ஆர் பார்த்திபனை இடைநீக்கம் செய்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்த நிலையில், இடைநீக்க உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது.

SR parthipan
SR parthipan

டெல்லி :நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில், நேற்று (டிச. 13) 2021ஆம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவையின் பார்வையாளர்கள் பகுதியில் இருந்த இரண்டு பேர் மக்களவை எம்பிக்கள் இருப்பிடத்திற்குள் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர்.

இருவரையும் பிடித்த மக்களவை உறுப்பினர்கள் அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல் நாடளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகயை வீசி பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்திய பெண் உள்பட 2 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்த டெல்லி போலீசார், 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று (டிச. 15) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடியது. அவை கூடியது முதலே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டி அமளியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குளறுபடி குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் நடப்பு கூட்டத் தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மக்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்டதாக திமுக எம்.பிக்கள் கனிமொழி, மாணிக்கம் தாக்கூர், காங்கிரஸ் எம்.பிக்கள் 5 பேர் என மொத்தம் 14 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவை திரிணாமுல் எம்.பியையும் சேர்த்து நடப்பு கூட்டத் தொடரில் மொத்தம் 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 14 எம்.பிக்களில் திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி பெயரும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் எஸ்.ஆர்.பார்த்திபன் இன்றைய (டிச. 14) அவை நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என கனிமொழி எம்பி தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மக்களவையில் இல்லாத ஒரு எம்பி, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி எப்படி இடைநீக்கம் செய்ய முடியும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டது என்றும், மொத்தம் 13 எம்.பிக்கள் மட்டுமே மக்களவையில் இன்று (டிச. 14) இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபனின் இடைநீக்க உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதன் மூலம் மக்களவையில் இன்று (டிச. 14) ஒரே நாளில் 13 எம்.பிக்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பியும் என மொத்தம் 14 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க :எம்.பிக்கள் சஸ்பெண்ட்... எப்படி ஜனநாயகம்? - கனிமொழி எம்.பி. கேள்வி!

ABOUT THE AUTHOR

...view details