தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.5.53 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது - ரயில் நிலையம் வழியாக தங்கம் கடத்தல்

இருவேறு சம்பவங்களில் ரூ.5.53 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்
ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்

By

Published : Mar 11, 2023, 7:44 PM IST

ஹைதராபாத்: தங்கத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியால், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சீனா, நேபாளம், பூடான், ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தப்படுவதாக தெரிகிறது. விமான நிலையங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், தங்கத்தை கடத்தி வரும் பலர் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. அதேநேரம் ரயில் மூலமாகவும் தங்கத்தை கடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

மேற்வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து செகந்திராபாத்துக்கு வரும் ஃபலாக் நுமா விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 8ம் தேதி, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் போலீசார், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பயணி ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடைமைகளை சோதனை செய்த போது 2.314 கிலோ தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.1.32 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

இதேபோல் ஸ்ரீகாகுளத்துக்கு வரும் ஹவுரா விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக போலீசார் மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடந்த 9ம் தேதி ஸ்ரீகாகுளம் ரயில் நிலையத்தில், பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களது உடைமைகளை சோதனை செய்த போது கடத்தல் பொருள் ஏதும் சிக்கவில்லை. எனினும் சந்தேகம் தீராத போலீசார், ட்ராலி பையினை சோதனை செய்த போது அதில் பிரத்யேகமாக பாக்கெட்டை உருவாக்கி இருந்ததை கண்டுபிடித்தனர். அதை திறந்து பார்த்த போது, தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 7.396 கிலோ மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும். மேலும் வங்கதேசத்தில் இருந்து தங்கத்தை கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவேறு சம்பவங்களில் பிடிபட்ட 3 பேரிடமும், தங்கக் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: "என் தந்தை என்னை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்" - ஸ்வாதி மாலிவால் பகீர்

ABOUT THE AUTHOR

...view details