தமிழ்நாடு

tamil nadu

யூதாஸ் நாணயம், திப்பு கீரிடம், நபி அணையா விளக்கு- அத்தனையும் பொய்யா கோபால்?

By

Published : Sep 28, 2021, 10:29 PM IST

போலி பழங்கால பொருள்களை விற்பனை செய்ததாக தனியார் அருங்காட்சியகத்தின் உரிமையாளர் ஒருவர் காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது குறித்து ஈடிவி பாரத்தின் கே. பிரவீன் குமார் விவரிக்கிறார்.

Monson Maavungal
Monson Maavungal

கொச்சி : கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் அருங்காட்சியகத்தில், இயேசு நாதரை காட்டிக்கொடுக்க யூதாஸ் பெற்ற 30 வெள்ளிக் காசுகளில் இரு வெள்ளிக் காசுகள், மோசஸின் சிலுவை, இன்று வரை எரியும் முகமது நபி பயன்படுத்திய ஆலிவ் எண்ணெய் விளக்கு, இயேசு கிறிஸ்து சிலுவையிலிருந்து கீழிறக்கப்பட்டபோது துடைக்க பயன்படுத்திய வெள்ளைத் துணி, மைசூரு அரண்மனையின் ஆவணங்கள், திப்பு சுல்தானின் கிரீடம், முகலாய பேரரசர்களின் நூலகங்களை அலங்கரித்த புத்தகங்கள், சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய பழங்கால பொருள்கள், டாவின்சியின் அசல் ஓவியங்கள் ஆகியவை இருப்பதாக கூறப்படுகிறது.

மான்சன் மாவுங்கல்

கொச்சி தனியார் அருட்காட்சியக உரிமையாளர் மான்சன் மாவுங்கல்

இந்த அருங்காட்சியகத்தின் உரிமையாளர் மீது பலர் அளித்த புகாரின் அடிப்படையின் அதன் உரிமையாளர் மான்சன் மாவுங்கல் (Monson Mavungal) காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த அருங்காட்சியகம் கொச்சியில் உள்ள கலூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பழங்கால அரிய பொருள்கள் பல இருப்பதாக தொடர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்டுவந்தது.

இந்தப் பொருள்களை மான்சன் மாவுங்கல் தனது வலைப்பக்கம் (Monsonmavungal.com) மற்றும் வலையொளி (Youtube) கணக்கு வாயிலாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்துவந்தார். மான்சன் மாவுங்கல் ஒரு கைதேர்ந்த விற்பனையாளர். இவரை உயர்ந்த மனிதர் என நம்பி ஆயிரக்கணக்கானோர் ஏமாந்துள்ளனர். இவர் ஜெர்மனியில் அழகுகலை பயின்றவர், 8 முனைவர் பட்டம் பெற்றவர் என்று மக்கள் நம்பவைத்துள்ளார்.

காயகல்ப சிகிச்சை

தற்போதைய கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரனுக்கு காயகல்பம் (வயதை தடுக்கும்) சிகிச்சை அளித்துள்ளார். இவர் பழங்கால பொருள்கள் வணிகத்தில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது கோழிக்கோட்டை சேர்ந்த யாகூப் என்பவர் முதலமைச்சரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

கேரள காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரனுடன் மான்சன் மாவுங்கல்

மான்சன் மாவுங்கல் யாகூப்பிடம் ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். யாகூப் போல் பலரும் மான்சன் மாவுங்கலிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துள்ளனர். அந்த வகையில் ரூ.10 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மான்சன் மாவுங்கல் தனது அருங்காட்சியகத்தில் உள்ள பொருள்கள் பல நாடுகளிலிருந்து பெறப்பட்டவை என்று கூறிவருகிறார்.

போலி பழங்கால பொருள்கள்

ஆனால் இதெல்லாம் ஆலப்புலாவின் சேர்தலாவில் உள்ள தச்சர்களால் தயாரிக்கப்பட்டது என்கிறார் அவரது நெருங்கிய நண்பர் அஜி. இவரது அதிக விலை சேகரிப்பாக கருதப்படும் திப்பு சுல்தான் பயன்படுத்திய பொருள்கள், சேர்தலாவில் உள்ள தச்சர்களால் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் பாலா, நவ்யா நாயர் உடன் மான்சன் மாவுங்கல்

மேலும் இங்குள்ள பல பொருள்கள் சேர்தலாவில் உள்ள தச்சர்களால் பழங்கால காதலர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தான் சம்பாதித்த பணத்தை சமூக ரீதியாக வளர பயன்படுத்தினார். அரசு உயர் அலுவலர் மற்றும் சினிமா நடிகர், நடிகை வட்டாரங்களுடன் தொடர்பை விரிவுப்படுத்தினார்.

முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு

சமூக வலைதளங்கள் வாயிலாக மக்களுக்கு வலைவிரித்தார். உயர் காவல் அலுவலர்களின் தொடர்பை பயன்படுத்தி தன் மீதான வழக்குகளை நீர்த்துப்போகச் செய்தார். பழங்கால பொருள்கள் விற்பனை மூலம் ரூ.2.62 லட்சம் கோடி சம்பாதித்துள்ளதாகவும் இந்தப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் இருப்பதாகவும் தனது வாடிக்கையாளர்களை நம்ப வைத்தார். இதற்காக பல போலி நாடகங்களை நடத்தியுள்ளார்.

நடிகை மம்தா மோகன்தாஸ்

இந்த வாய்ப்பையும் பயன்படுத்தி தனது கொள்ளை திட்டத்தை கனக் கச்சிதமாக நடத்திவந்துள்ளார். இவருக்கு உதவியதாக ஐஜி லட்சுமணன் மற்றும் கேரள காங்கிரஸ் மாநிலத் தலைவர் சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இருவரும் மறுத்துள்ளனர். தான் சிகிச்சைக்காக மட்டுமே மான்சனை சந்தித்ததாக சுதாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

பாலியல் குற்றவாளிக்கு பாதுகாப்பு

மான்சன் மீது பெண் ஒருவரும் புகார் கூறுகிறார். தன்னை பலவந்தமாக பாலியல் ரீதியாக காயப்படுத்தியவரை மான்சன் காப்பாற்றுவதாக அப்பெண் கூறியுள்ளார். 52 வயதான மான்சனின் குற்றப் பயணம் 1995ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது.

வெளிநாட்டு வாழ் மலையாளிகள் விழாவில் மான்சன் மாவுங்கல்

அப்போது மான்சன் இடுக்கி மாவட்டத்தில் ராஜ குமாரி என்ற பெண்ணுடன் வசித்தார். ராஜ குமாரி தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது, மாருதி 800 ரக கார்களை மலிவு விலைக்கு உடனடியாக விற்பதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார்.

குற்றப் பயணம்

பின்னர் தொலைக்காட்சி மோசடி, விலையுயர்ந்த கார்கள் மோசடி என தொடர்ந்துள்ளது. இதற்கிடையில் மான்சன் 2007ஆம் ஆண்டு கொச்சிக்கு தனது இருப்பிடத்தை மாற்றினார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மான்சன்

தற்போது, இவரிடம் பென்டிலிஸ், லம்போர்கினிஸ், ஃபெராரிஸ் மற்றும் பென்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த கார்கள் உள்ளன. ஆனால் இந்தத் தகவல்கள் அவரின் வருமானத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் டூ பாஜக

மான்சனின் வழக்கில் நாளுக்கு நாள் திருப்பங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே. சுதாகரன், பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் மற்றும் பல்வேறு உயர் மட்ட தலைவர்கள், அலுவலர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. ஆகவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும் குரல்கள் இப்போதே ஒலிக்கத் தொடங்கிவிட்டன.

இதையும் படிங்க : ஸ்ரீநகர்-லே ஜோசிலா சுரங்கப்பாதை; பனி மூடினாலும் பயணம்.. அடுத்த 4 ஆண்டுகளில்!

ABOUT THE AUTHOR

...view details