தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 7, 2023, 10:47 AM IST

ETV Bharat / bharat

டிஜிட்டல் கடன்பெறும் முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை

வங்கிகளிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ டிஜிட்டல் கடன்பெறும் முன்பு என்னென்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து காணுங்கள்.

டிஜிட்டல் வங்கிக்கடன் பெறுவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்
டிஜிட்டல் வங்கிக்கடன் பெறுவதற்கு முன் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்கள்

ஹைதராபாத்: முன்பெல்லாம், கடன் வாங்குவதில் பல சிரமங்கள் இருந்தன. ஆனால், இப்போது சில நிமிடங்களில் கடன் பெற்றுவிட முடிகிறது. வங்கிகளும் டிஜிட்டல் முறையில் உடனடியாகவும் எளிதாகவும் கடன் வழங்குகிறது. இப்படி எளிதாக கடன்தொகை கிடைத்துவிடுவதால், அதில் உள்ள சாதக பாதகங்களைக் கருத்தில் கொள்ளாமல் வாடிக்கையாளர்கள் கடன் வாங்குகின்றனர். இந்த கடனால் பிற்காலங்களில் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிக வட்டியை செலுத்துவது மட்டுமல்லாமல், கிரிடிட் ஸ்கோரையும் இழக்கின்றனர். ஆகவே, டிஜிட்டல் லோன் வாங்குவதற்கு முன்பாக நீங்கள் சிலவற்றை கருத்தில்கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு.

இன்றைய காலகட்டத்தில், நீங்கள் கேட்காமலேயே டிஜிட்டல் சலுகைகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளரின் ஆசையை தூண்டி கடன் வழங்கப்படுகிறது. ஏனென்றால், ஒருவரை நேரிலோ, வங்கியிலோ சென்று சந்திகாமலேயே போனில் அழைத்து கடனை வழங்க முடிவதால் வங்கிகளும், கடன் வழங்கும் நிதி நிறுவனங்களும் போட்டிப்போட்டுக்கொண்டு கடன்களை வழங்குகின்றன.

'டிஜிட்டல் லெண்டிங்' என்பது ஆன்லைன் அல்லது ஆப்ஸ் மூலம் தனிநபர் கடன்கள் பெறுவதாகும். இதன் மூலம் பல்வேறு தனியார் கடன் நிறுவனங்கள் சில நிமிடங்களில் கடன் வாங்குபவர்களின் கணக்குகளில் பணத்தை டெபாசிட் செய்துவிடுகிறது. இதனால், சிந்திக்க கூட நேரமிருப்பதில்லை. நீங்கள் வாங்கும் கடன் மீதான வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தெரிந்துகொண்ட பின்பே கடன் வாங்க வேண்டும்.

முதலில், உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். கடன் வாங்கும் போது, உங்களது வருமானம் மற்றும் செலவினங்கள் குறித்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். இந்த கடனுக்கான செயலாக்க கட்டணம், முன்பணம் செலுத்துதல், தாமதமாக செலுத்தினால் விதிக்கப்படும் கட்டணம் ஆகியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கடன் பெற்றப்பிறகு நீங்கள் செலுத்தும் தவணை உங்கள் மொத்த வருமானத்தில் 40 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அதற்குமேல் இருந்தால், உங்களது மொத்த வருமானமும் கடனில் செலவழிந்துவிடும்.

அதேபோல தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்களிடம் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கிரெடிட் ஸ்கோர் என்பது ஏற்கனவே உள்ள அல்லது முந்தைய கடன்களில் நீங்கள் திருப்பிச் செலுத்தும் பதிவை அடிப்படையாகக் கொண்டது.

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது 750 -க்கு மேல் இருக்க வேண்டும். இதை விட குறைவான கிரெடிட் ஸ்கோர் இருக்கும்பட்சத்திலும் நீங்கள் கடன் வாங்கலாம். ஆனால், திருப்பி செலுத்த கால தாமதமானால் எதிர்காலத்தில் கிரெடிட் ஸ்கோர் மிகவும் பாதிக்கப்படும். இதனால் தேவைப்படும்போது கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். கடன் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்தி, சிறிய தொகைக்கு மட்டுமே கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம்.

கடன் பெறும் நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் கவனமாக இருங்கள். சில தனியார் கடன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்தக்கூடும். அதோடு நீங்கள் பதிவேற்றம் செய்யும் சான்றிதழ்களை வைத்து மோசடியில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. ஆகவே, ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவது நல்லது.

இதையும் படிங்க:ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details