தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 8:03 PM IST

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கு! அமலாக்கத்துறை விசாரணையை பருக் அப்துல்லா புறக்கணிப்பு!

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் ஆஜராகுமாறு தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில், அவர் ஆஜராகாமல் புறக்கணித்து உள்ளார்.

Farooq Abdullah
Farooq Abdullah

ஸ்ரீநகர் :தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா கடந்த 2001 முதல் 2012 வரை அம்மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்தார். அப்போது 2004 முதல் 2009 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் சங்கத்தில் 43 கோடியே 69 லட்ச ரூபாய் வரை சங்க நிர்வாகிகள் முறைகேடு செய்ததாக ஸ்ரீநகர் ராம்முன்ஷி பாக் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் அஹசன் அகமது மிர்சா என்பவர் சங்க நிதியில் 51 கோடியே 90 லட்ச ரூபாயை முறைகேடு செய்து அதன் மூலம் தனது சொந்தக் கடனையும் வணிகத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டது தெரிய வந்ததாக கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக 21 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர். இதில், பரூக் அப்துல்லாவின் 11 கோடியே 86 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத்துறையினர் முடக்கினர். இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்க பணமோசடி வழக்கில் பரூக் அப்துல்லாவை இன்று (ஜன. 11) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால் 86 வயதான பரூக் அப்துல்லா, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் பரூக் அப்துல்லாவுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க :உத்தர பிரதேசத்தில் 5 கூடுதல் விமான நிலையங்கள்! திறப்பு எப்போது? மத்திய அமைச்சர் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details