ஹைதராபாத்: நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் பரபரப்பாக நடந்தேறிய சட்டசபைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை ஞாயிறு அன்று காலையில் தொடங்குவதற்கு இன்னும் ஒருசில மணிநேரங்களே உள்ள நிலையில் ஆருடங்களும், கருத்துக் குவியல்களும் சிகரத்தைத் தொட்டு பரப்பரப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ஆம் அன்று அறிவித்தது.
மொத்தம் 824 சட்டசபைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 2.7 லட்ச வாக்குச் சாவடிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருக்கின்றனர். மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இருக்கும் சட்டசபைகளின் ஆயுட்காலம் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகின்றன.
ஞாயிறு அன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளிலிருந்து வெளியே கொண்டுவரப்படும் போது பல வேட்பாளர்களின் எதிர்காலம் வெளியே தெரியவரும்.
அஸ்ஸாம்:
அஸ்ஸாம் மாநிலத்தின் சட்டசபைத் தொகுதிகளில் தேர்தல் மூன்று கட்டமாக நடத்தப் பட்டிருக்கிறது.
பிரதானப் பிரச்சினைகளும் தேர்தல் பிரச்சாரமும்
அஸ்ஸாமில், காங்கிரஸ் தட்டி எழுப்பியிருக்கும் குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான மக்கள் உணர்வுக்கும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் பாஜக கொண்டு வந்த முன்னேற்றத் திட்டத்திற்கும் இடையே வாக்காளர்களின் மனநிலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
பெரும் போட்டி
அஸ்ஸாம் மாநிலத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸ் ஆதரவு கொண்ட ஆல் இந்தியா யுனைட்டட் டெமொகிராட்டிக் ஃப்ரண்டுக்கும் இடையேதான் போட்டி நிலவுகிறது.
அஸ்ஸாம் முதல் அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான சர்பானந்தா சோனாவால், பாஜகவின் பிஸ்வா சர்மா, அஸ்ஸோம் காண பரிஷத் தலைவர் அடுல் போரா, ஆல் இந்தியா யுனைட்டட் டெமொகிராட்டிக் ஃப்ரண்ட் தலைவர் பட்ருட்டின் அஜ்மல், அஸ்ஸாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா, ரெய்ஜோர் தல் தலைவரும், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சிறைப்பட்டிருக்கும் போராளியுமான அகில் கோகோய் ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டிருக்கும் பிரதானமான வேடபாளர்களில் ஒருசிலர் ஆவார்.
கருத்துக் கணிப்புகள்
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் என்பவை குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களின் எதிர்வினைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதனால் நூறு சதவீதம் அவை துல்லியமானவை என்று சொல்ல முடியாது.
அஸ்ஸாமில் மொத்தம் 126 தொகுதிகளில் பாஜக கூட்டணி 64 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 55 தொகுதிகளையும் வெல்லலாம் என்று ஈடிவி பாரத் கணித்திருக்கிறது. மிச்சமிருக்கும் ஏழு தொகுதிகளை புதிய கட்சியான அஸோம் ஜாட்டிய பரிஷத், குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சிறைப்பட்டிருக்கும் போராளியான அகில் கோகோய் தலைமையில் இயங்கும் ரெய்ஜோர் தல் மற்றும் சுயேட்சைகள் வெல்லக்கூடும்.
ஆளும் கட்சியின் கூட்டணியே வெல்லும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறியிருக்கின்றன. இந்தியா டுடே-மை ஆக்ஸிஸ், மற்றும் டைம்ஸ் நவ்-சிவோட்டர் ஆகியவை பாஜகவுக்கே வெற்றி என்று கருத்து தெரிவித்திருக்கின்றன. ரிபப்ளிக் சிஎன்எக்ஸ் தேசிய ஜனநாயகக் கூட்டணியே ஜெயிக்கும் என்று கருத்து சொல்லியிருக்கிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதியன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
பிரதானப் பிரச்சினைகளும் தேர்தல் பிரச்சாரமும்
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டிலும் அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான் எப்போதுமே நேரடி போட்டி. இப்போதும் அப்படித்தான். இந்தமுறை ’உள்ளூர்வாசி மற்றும் வெளியூர்க்காரன்’ என்ற சித்தாந்தத்தை தேர்தல் ஆயுதமாகக் கையில் எடுத்திருக்கிறது திமுக. தேர்தலில் அதிமுக ஜெயித்தால், இந்த மாநிலத்தைத் தொடந்து ஆளப்போவது அந்தக் கட்சி அல்ல; பின்கதவு வழியாக டில்லியிருந்து பாஜகதான் ஆளும் என்று பிரச்சாரம் செய்திருக்கிறது திமுக. தேர்தல் பரப்புரையில் மைய இடத்தைப் பிடித்துக் கொண்ட பிரச்சினைகள் ஊழலும் நீட் தேர்வும்தான். கரோனா தீநுண்மியும் பரப்புரையில் இடம் பெற்றது.
அதிமுக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி பதவியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். பத்து ஆண்டு இடைவெளிக்குப் பின்பு திமுகவை அரியணை ஏற்றுவது என்ற சங்கல்பத்தோடு இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் ஆன எம். கே. ஸ்டாலின். இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் அவர்களின் முன்னாள் தலைவர்கள் காலமாகி விட்டபடியால் வாக்காளர்களை வசீகரிக்கும் தலைவர்கள் இல்லாமல் களம் இறங்கி இருக்கின்றன.
மக்கள் நீதி மையத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாஸனும், அதிமுகவின் துணைமுதல்வரான ஓ பன்னீர் செல்வமும் களத்தில் நிற்கும் முக்கிய வேட்பாளர்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், எடப்பாடியின் ஆட்சி முடிவுக்கு வருவது போலவும், திமுக ஆட்சியைப் பிடிக்கும் நிலையில் இருப்பது போலவும் தெரிகிறது. திமுக கூட்டணி 133 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு வெறும் 89 தொகுதிகள் மட்டுமே கிட்டும் என்றும், மிச்சமிருக்கும் 12 தொகுதிகள் மற்றவர்களுக்குச் செல்லும் என்றும் ஈடிவியின் கருத்துக் கணிப்புச் சொல்கிறது.
மற்றும் டைம்ஸ் நவ்-சிவோட்டர், இந்தியா டுடே-மை ஆக்ஸிஸ், ரிபப்ளிக்-சிஎன்எக்ஸ் ஆகியவையும் திமுகவே ஆட்சியைக் கைப்பற்றும் என்று ஆருடம் சொல்லியிருக்கின்றன.
கேரளா
ஒரே கட்டமாக கேரளா சட்டசபையின் 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடந்திருக்கிறது.