பெங்களூரு:கர்நாடகாவில் அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தாரமையாவை முதலமைச்சராக முன்நிறுத்தும் நோக்கில், அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர்.
கர்நாடக காங். தலைவர் விளக்கம்
இந்நிலையில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் நேற்று (ஜூலை.24) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,"யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆக வேண்டும் என கனவு காணலாம். தேர்தலில் தோற்றாலும் முதலமைச்சராக முடியும் என்பதை கர்நாடகாவின் கடந்த காலங்களை புரட்டி பார்த்தாலே தெரியும்.
முதலமைச்சராகும் கனவு
அனைத்து எம்.எல். ஏக்களுக்கும் முதலமைச்சராகும் கனவு காண உரிமை உண்டு. இது மாதிரியான ஆசைகள் இருப்பதில் எவ்வித தவறுமில்லை.
எனினும முக்கிய முடிவுகளை கட்சி மேலிடம் தான் எடுக்கமுடியும். அதற்கு முன்னதாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கவேண்டும். சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு சாராருடைய கருத்துக்களைதான் ஊடகங்களின் மூலம் அறிய நேர்ந்தது.
இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சித்தாராமையா கவனம் செலுத்துவார். ஒருவேளை அவர் கவனம் செலுத்த தவறினால், கட்சி மேலிடம் அதை பார்த்துக் கொள்ளும்.நான் முதலமைச்சராக அவரசப்படவில்லை" என்றும் சிவக்குமார் கூறினார்.