ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்): தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஹசன்போரா கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இது குறித்து காஷ்மீர் காவல்துறையினர் கூறுகையில், "பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர், சிஆர்பிஎஃப் வீரர்கள், ராணுவத்தினர் இணைந்து அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று (ஜன.9) ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இந்தாண்டு 2022இல் நடக்கும் ஏழாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இதுவாகும். இதுவரை 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பெரும்பாலான தாக்குதல்கள் தெற்கு காஷ்மீரில் நடந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருநின்றவூரில் வழக்கறிஞருக்கு வெட்டு!