கலிபோர்னியா: கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தது முதலே பெரும் பொருளாதார பேரிழப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. நிதி நிலையைச் சுட்டிக் காட்டி டிவிட்டர் தொடங்கி பெரும் நிறுவனங்கள் அனைத்தும் ஊழியர்கள் பணி நீக்கத்தைச் செய்து வருகின்றன. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதும், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை பணியிலிருந்து தூக்கிப் பணி நீக்க கலாச்சாரத்தைப் பெரியளவில் அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, கூகுள், அமெசான் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட பணியாளர் நீக்கத்தை கையில் தூக்கின. இந்த முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது உலகின் முன்னணி கேளிக்கை நிறுவனமான டிஸ்னியும் இந்த வரிசையில் இணைந்துள்ளது.
ஏறத்தாழ 7 ஆயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இந்த நீக்கம் இருக்காது என்றும், உலகம் முழுவதும் உள்ள டிஸ்னி கிளைகளிலிருந்து 7 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊடகத் துறையில் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மையற்ற சூழல், பல மில்லியன் டாலர் செலவு குறைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பணியாளர் நீக்கத்தை கையில் எடுத்துள்ளதாக டிஸ்னி நிர்வாகம் தெரிவித்துள்ளது. டிஸ்னி நிறுவனத்தில் 2 லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் உள்ள நிலையில், அதில் 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் அமெரிக்காவில் பணியாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது.
ஓட்டு மொத்தமாக 7 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால், உலக அளவில் உள்ள டிஸ்னி கிளைகளில் பணியாற்றும் 3 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம் டிஸ்னி நிறுவனத்தில் பங்கு வைத்திருப்பவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.