டெல்லி:மே 7 ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்திலிருந்து ஹைதராபாத்திற்கு செல்ல மாற்றுத்திறனாளி குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்திருந்தனர். இவர்கள் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்யவிருந்த நிலையில், குழந்தையின் உடல்நிலையை கருத்தில்கொண்டு, குழந்தையை விமானத்தில் ஏற்றுவதற்கு விமான ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால், பெற்றோரும் அதில் பயணிக்கவில்லை.
இதற்கிடையில், இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இதனைக்கண்ட வலைதளவாசிகள் உள்பட பலரும், இண்டிகோ விமான நிறுவனத்திற்கு தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இதனையடுத்து, டிஜிசிஏ (DGCA) எனப்படும் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
இக்குழுவின் விசாரணைக்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ‘குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் விமானத்தில் பயணிக்க முடியவில்லை. இதனால், அந்த குழந்தையின் பெற்றோரும் விமானத்தில் ஏற வேண்டாம் என முடிவு செய்தனர்’ எனத் தெரிவித்தது. இண்டிகோவின் இந்த பதில் திருப்திகரமாக இல்லாததால், டிஜிசிஏ இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது.