தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 16, 2021, 10:15 AM IST

ETV Bharat / bharat

'சுதந்திரத்துக்குப் பின் நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா' - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் கருத்து!

சென்னை: சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பல இடங்களில், பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவ அரசு இல்லை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ரகுராம் ராஜன்
former RBI Governor

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். டெல்லியிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் கல்வி மையம் சார்பில் நேற்று (மே.15) நடந்த 'வீடியோ கான்பரன்சிங்' சந்திப்பில் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது," இந்தியாவுக்கு கரோனா வைரஸ் பெருந்தொற்று கொடுத்துள்ள மிகவும் வேதனையான நேரமிது. சுதந்திரத்துக்குப்பின் இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் கரோனா வைரஸ் பெருந்தொற்றாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

நாடு சந்திக்கும் மிகப்பெரிய சவால்

இந்தியாவில் கரோனா முதல் அலை தாக்கும்போது அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கால்(லாக்டவுன்) பொருளாதாரத்தில் மிகப்பெரிய சவாலான சூழல் எழுந்தது. ஆனால், இப்போது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் சவால்கள் எழுந்து உள்ளன. நாம் முன்னேறும் போது, சமூக ரீதியான பங்கும் இனி இருக்கும். கரோனா வைரஸின் மிகப்பெரிய பாதிப்புகளில் ஒன்று, பல்வேறு இடங்களில், பல்வேறு காரணங்களுக்காக மக்களுக்கு உதவ அரசு இல்லாமல் இருந்ததைப் பார்க்க நேர்ந்தது.

பல இடங்களில் அரசால் மக்களுக்கு உதவ முடியவில்லை. அரசு இயந்திரம் வேலை செய்யவில்லை. கரோனா பெருந்தொற்று முடிந்தபின் நாம் சமூகத்தை நோக்கி கேள்வி கேட்காவிட்டால், மிகப்பெரிய சோகத்தை இந்த பெருந்தொற்று விட்டுவிட்டுச் செல்லும். இப்பெருந்தொற்று கடந்து செல்லும்போது, அரசாங்கங்கள் கூட தோல்வி அடைந்து, நம்பிக்கையற்ற சூழலுக்குச் செல்லும் என, நான் நம்புகிறேன்.

திவால் செயல்முறை அறிவிக்க வேண்டும்

இப்பெருந்தொற்று காலம் நாம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளது. எந்த ஆணும், பெணும் தனித்து தீவில் விடப்படவில்லை. சீர்திருத்தம் என்பது மறைமுகமாக இருக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும். குறு,சிறு, நடுத்தர துறைகளுக்கு விரைவாக திவால் செயல்முறையை அரசு அறிவிக்க வேண்டும்.

நான் கடந்த 2015ஆம் ஆண்டு, அக்டோபர் 31ஆம் தேதி புதுடெல்லி ஐஐடியில் பேசியது அரசுக்கு எதிரானது அல்ல. ஆனால், நான் பேசியது பலநேரங்களில் தவறாக சித்தரிக்கப்பட்டுவிட்டது" என்றார் ரகுராம் ராஜன்.

கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி, டெல்லி ஐஐடியில் ரகுராம் ராஜன் பேசுகையில், “கருத்துக்களுக்கான சூழலை மேம்படுத்துவதற்குச் சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அவசியம். எந்தவொரு குறிப்பிட்ட குழுவிற்கும், உடல் ரீதியான தீங்கு அல்லது வாய்மொழி அவமதிப்பு அனுமதிக்கப்படக்கூடாது. பேச்சு சுதந்திரம், விமர்சிக்கும் சுதந்திரம் நமக்கு அவசியம். 21ஆம் நூற்றாண்டுக்கு இது நம்மை தயார்ப்படுத்தும்” என்று தெரிவித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details