தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 17, 2021, 11:32 AM IST

ETV Bharat / bharat

உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களையும் கோவாக்சின் தடுக்கும்!

உருமாற்றமடைந்த கரோனா வைரஸ்களை தடுக்கும் திறன் கோவாக்சினுக்கு இருப்பதாக பாரத் பயோடேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

covaxin
கோவாக்சின்

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இந்திய மக்களிடம் உருமாறிய கரோனா வைரஸ் அதிகளவில் தென்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர். இச்சமயத்தில்தான், மக்கள் மத்தியில் புதிய சந்தேகம் ஒன்று எழும்பியுள்ளது. தற்போது, கரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய ஆயுதமாகப் பார்க்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி, உருமாறிய கரோனா தென்படுவதற்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இந்த தடுப்பூசி பலன் தருமா என்ற கேள்வி இருந்துவந்தது.

இந்நிலையில், இந்த கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கரோனா வகை (B.1.1.7), இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா (B.1.167) வகைகளுக்கு எதிராக நன்றாக வேலை செய்வதாக பாரத் பயோடேக் நிறுவனம் அறிவித்துள்ளது. இது இந்திய தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், "கோவாக்சின் தடுப்பூசி பிரிட்டன் கரோனா வகை (B.1.1.7) , இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா (B.1.167) வகைக்கு எதிராக நன்றாகச் செயல்படுகிறது. இந்த தடுப்பூசி உருமாறிய கரோனா வகைகளுக்கு எதிராகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. இது கோவாக்சின் தடுப்பூசிக்குச் சர்வதேச அளவில் கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ்களையும் அழிக்கும் கோவாக்சின்

இந்த ஆய்வுக் கட்டுரையானது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரிக்கும் நிலையில், கோவாக்சின் தடுப்பூசியை ஐசிஎம்ஆர், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது

கோவாக்சின் தடுப்பூசி கடந்து வந்த பாதை

  • ஏப்ரல் 2020 - SARS-COV-2 வைரசுக்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்க ஐசிஎம்ஆரிடம் அனுமதி கோரப்பட்டது.
  • மே 2020: SARS-COV-2 வைரஸ் மாதிரிகள் பாரத் பயோடேக் ஆய்வக வளாகத்திற்கு புனேவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
  • ஜூன் 2020: முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
  • ஜூலை 2020: தன்னார்வலர்களிடம் முதற்கட்ட சோதனை நடத்திட டிசிஜிஐ-யிடம் அனுமதி கோரப்பட்டது.
  • செப்டம்பர் 2020: தன்னார்வலர்களிடம் 2ஆம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.
  • நவம்பர் 2020: சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் 3ஆம் கட்ட சோதனை நடத்தப்பட்டது.
  • ஜனவரி 3, 2021: கோவாக்சின் தடுப்பூசி அவசரக் காலத்திற்குப் பயன்படுத்த டிசிஜிஐ அனுமதி வழங்கியது.
  • ஜனவரி 13, 2021: இந்தியா முழுவதும் கோவாக்சின் தடுப்பூசி விநியோகிக்கப்பட்டது.
  • ஜனவரி 16,2021: நாடு முழுவதும் முன் களப்பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடக்கம்.
  • மார்ச் 27, 2021: தடுப்பூசி செயல்திறன் நன்றாக இருப்பதாக, 8 சர்வதேச இதழ்களில் ஆய்வு முடிவுகள் வெளியாகின.
  • ஏப்ரல் 2021: நாடு முழுவதும், 20 மில்லியன் டோஸ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
    கோவாக்சின் தடுப்பூசி கடந்த வந்த பாதை

தற்போது, 500 மில்லியன் டோஸ் அளவிற்குத் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடேக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வந்துள்ளது. ஊசி செலுத்துவது போல் இல்லாமல், பவுடர் வடிவில் உட்கொள்ளும் புதிய கரோனா தடுப்பு மருந்தான 2 டிஜியின் விநியோகம் இன்று இந்தியாவில் தொடங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details