ஓங்கோல்: சென்னை மயிலாப்பூர் துவாரகா மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60). இவரது மனைவி அனுராதா (55). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வசிக்கும் தனது மகள் சுனந்தாவின் பிரசவத்திற்காக சென்றுவிட்டு நேற்று (மே7) சனிக்கிழமை காலை 3.30 மணியளவில் விமானம் மூலமாக சென்னை திரும்பியுள்ளனர்.
சென்னைக்கு திரும்பிய தம்பதியினரை அவர்களது கார் ஓட்டுநரான நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் காரில் ஏற்றிக்கொண்டு மயிலாப்பூரில் உள்ள தம்பதியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், மகள் சுனந்தா வீட்டிற்கு திரும்பிய பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த சுனந்தா, தனது உறவினரான அடையாறு இந்திரா நகரில் வசிக்கும் திவ்யாவிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, திவ்யா தனது கணவர் ரமேஷ் உடன் சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து பார்த்தபோது தம்பதி அங்கு இல்லை மேலும் வீட்டில் இருந்த பொருள்கள் கலைக்கப்பட்டிருந்துள்ளன. இதனால் மேலும் சந்தேகமடைந்த அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மயிலாப்பூர் துணை ஆணையர் கவுதமன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், விமான நிலையத்தில் இருந்து தம்பதியை ஓட்டுநர் அழைத்து சென்று உறுதியானது.
ஜிபிஎஸ்யை வைத்து பிடித்த காவல்துறை: இதையடுத்து, காரின் ஜிபிஎஸ்-ஐ வைத்து கார் ஓட்டுநரான கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வந்தனர். இதில் ஓட்டுநர் கிருஷ்ணா சென்னையைத் தாண்டி ஆந்திரா பகுதியில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக சென்னை காவல்துறையினர், ஜிபிஎஸ் வைத்து, ஆந்திராவின் பிரகாசம் மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.