தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 5, 2021, 7:36 PM IST

ETV Bharat / bharat

ரஃபேல் ஒப்பந்தம் குறித்த திடுக்கிடும் உண்மைகள்? முழுமையான விசாரணை கோரும் காங்கிரஸ்!

டெல்லி: ரஃபேல் ஒப்பந்தம் குறித்து ஃபிரெஞ்சு ஊடகம் ஒன்று இன்று பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்த காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ்

ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஃபிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம்போட்டது. இந்த ஒப்பந்தத்தில் ரூ.58 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது.

இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்திருப்பதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், விமானங்களை தயாரித்த நிறுவனம் இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு 1.1 மில்லியன் யூரோ டாலர்களை அளித்ததாக ஃபிரெஞ்சு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ், ரஃபேல் ஒப்பந்தம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி, பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, "ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பது தற்போது ஃபிரெஞ்சு ஊடகம் வெளியிட்ட செய்தியால் உறுதியாகியுள்ளது.

ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு ரஃபேல் போர் விமானத்தை தயாரித்த டசால்ட் நிறுவனம், இடைத்தரகராக செயல்பட்ட டெஃப்ஸிஸ் சொல்யூஷன் என்ற இந்திய நிறுவனத்திற்கு 1.1 மில்லியன் யூரோக்களை வழங்கியிருப்பது ஃபிரெஞ்சு ஊழல் தடுப்பு முகமை மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆகவே நாட்டின் மிகப்பெரிய ஒப்பந்தமான ரஃபேலில் எந்தளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளது, எவ்வளவு கமிஷன் வழங்கப்பட்டுள்ளது, அப்படி, பணம் வழங்கப்பட்டிருந்தால் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிந்து கொள்வதற்கு முழுமையான சுதந்திரமான விசாரணை தேவை? பிரதமர் மோடி இதற்கு பதில் அளிப்பாரா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details