தமிழ்நாடு

tamil nadu

வாக்காளர்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகள்.. காங்கிரஸின் கர்நாடகா பார்முலா.. கேசிஆரின் புதிய யுத்தி.. தெலங்கானாவில் சூடுபிடிக்கும் அரசியல் களம்!

Telangana Election Manifesto: தெலங்கானா மாநிலம் வரும் நவம்பர் 30ஆம் தேதி தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்குப் போட்டியாக ஆளுங்கட்சியான பிஆர்எஸ் கட்சியும் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

By PTI

Published : Oct 15, 2023, 8:23 PM IST

Published : Oct 15, 2023, 8:23 PM IST

Updated : Oct 15, 2023, 9:11 PM IST

Etv Bharat
Etv Bharat

ஹைதராபாத்:தெலங்கானாவில் வரும் நவம்பர் மாதம் 30ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டதில் இருந்து 10 ஆண்டுகளாக தொடர்சியாக கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி (தெலங்கானா ராஷ்ட்ர சமிதி) கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் தெலங்கானாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரசின் கர்நாடகா பார்முலா:கர்நாடகா மாநில தேர்தலில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் தெலங்கானா தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே காங்கிரஸ் வாக்குறுதிகளை அறிவிக்கத் துவங்கியது. கடந்த மே மாதம் தெலங்கானா வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தெலங்கானாவில் மாணவிகளுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவித்தார்.

மேலும், தனித் தெலங்கானா மாநில போராட்டத்திற்காக உயிர் நீத்த இளைஞர்கள் தியாகிகளாகக் கருதப்படுவார்கள் என்றும், அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பெற்றோருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஓய்வூதியம், இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.10 லட்சம் வரையிலான வட்டியில்லா கடன் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

முன்னதாக கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க அவர்கள் அறிவித்திருந்த வாக்குறுதிகள் முக்கியமானதாக அமைந்திருந்தது. தமிழகத்தில் திமுக அரசின் வாக்குறுதிகளைப் பின்பற்றி கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் அறிவித்திருந்தது. அவர்கள் பின்பற்றிய திராவிட மாடல் பார்முலா வெற்றி பெற்றதால், அதே வழிமுறையை தெலங்கானா தேர்தலிலும் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்காக தெலங்கானா வந்திருந்த சோனியா காந்தியும் பல வாக்குறுதிகளைத் தெரிவித்திருந்தார். மகாலட்சுமி திட்டத்தில் மகளிருக்கு மாதந்தோறும் 2,500 ரூபாய், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், அரசுப் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா கார்டுகள், முதியோர்களுக்கு மாதம் ரூ.4,000 ஓய்வூதியம், சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவதற்கான நிலம் மற்றும் ரூ.5 லட்சம் ஆகிய வாக்குறுதிகளை அறிவித்திருந்தார்.

கைகொடுத்த திராவிட மாடல்:தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் பல வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது. பெண்களுக்கு இலவசப் பேருந்து திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித் தொகை போன்ற அறிவிப்புகள் அவர்களுக்கு வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

இதைப் பின்பற்றி கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, வீடுகளுக்கு இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்திருந்தது. மேலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் முதல் வேலையாக இந்த திட்டங்களை அமல்படுத்தவும் செய்தது. காங்கிரசின் இந்த செயல் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதேபோல், தெலங்கானா தேர்தலில் அறிவித்துள்ள திட்டங்களும் உடனடியாக அமல்படுத்தப்படும் என காங்கிரஸ் முழங்கி வருகிறது.

பிஆர்எஸ் பின்பற்றும் திராவிட மாடல்: காங்கிரசின் அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதால், பிஆர்எஸ் கட்சியும் மக்களைக் கவரும் வகையில் வாக்குறுதிகளை தயார் செய்து வந்தது. முன்னதாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அதை பின்பற்றி தெலங்கானாவிலும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று பிஆர்எஸ் கட்சி நிறுவனரும், தெலங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

  • வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள (Below Poverty Line) 93 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீடு
  • சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2016-இல் இருந்து படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே ரூ.3016ஆக உயர்த்தப்படும்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4016-லிருந்து ரூ.6016 ஆக உயர்த்தப்படும்.
  • தகுதியானவர்களுக்கு 400 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்
  • ஆரோக்கிய ஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு
  • ரைத்து பந்து திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், ஐந்தாண்டுகளில் ரூ.16 ஆயிரமாக உயர்த்தப்படும்.

உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார். இந்த வாக்குறுதிகள் ஆட்சியமைத்த 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகளில் 90 சதவீதம், வாக்குறுதியில் தெரிவிக்காத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

தெலங்கானா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்காகக் காங்கிரஸ், பிஆர்எஸ் என இரு கட்சிகளும் மக்களைக் கவர மாறி மாறி பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், திமுக அரசின் திட்டங்களைப் பின்பற்றிப் பிற மாநிலங்களில் தேர்தல்களில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருவதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறனர்.

அதேவேளையில் இலவசங்களை எதிர்த்து வரும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிட உள்ளது என்பது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானா, சத்தீஸ்கர், ம.பி சட்டமன்றத் தேர்தல்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!

Last Updated : Oct 15, 2023, 9:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details