டெல்லி:டெல்லியில் மதுபான ஊழல் விவகாரம் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு தலைவலியாக மாறி இருக்கும் நிலையில், அதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் அரசு குடியிருப்பு புதுப்பிப்பு விவகாரம் பூதாகரமாகி வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால், தனது அரசு குடியிருப்பு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது என்றும், அது மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறி அரசு செலவில் அதனைப் புதுப்பித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கி 2022ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றன.
இதில், மார்பிள், தரைவிரிப்புகள், திரைச்சீலைகள் உள்ளிட்டவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புதுப்பிக்கப்பட்ட வீட்டின் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின. இதனை பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. கெஜ்ரிவால் தனது வீட்டை புதுப்பிப்பதற்காக 45 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு ஆம்ஆத்மி தலைவர்கள், பிரதமரின் இல்லமும், மற்ற மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்களின் இல்லமும் இதை விட பல மடங்கு நிதியைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லம் சுமார் 171 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று(மே.7) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் அரசு இல்லத்தைப் புதுப்பிக்க 45 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், உண்மையில் அதைவிட பல மடங்குத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது. இல்லத்தை புதுப்பிக்க 171 கோடி ரூபாயை டெல்லி முதல்வர் செலவு செய்துள்ளார்.